அவதூறு பேச்சு: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு


அவதூறு பேச்சு: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 Sep 2023 5:01 AM GMT (Updated: 17 Sep 2023 5:04 AM GMT)

முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.

தூத்துக்குடி,

விளாத்திகுளத்தில் நேற்று முன்தினம் அ.தி.மு.க. மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கலந்து கொண்டார்.

பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தமிழ்நாடு முதல்-அமைச்சர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரை அவதூறாக பேசியதாக கூறியும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.

இந்த நிலையில், புகாரின் அடிப்படையில் விளாத்திகுளம் போலீசார் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(B),153(A),505(2),ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story