மரணத்தில் தள்ளும் மனஅழுத்தம்


மரணத்தில் தள்ளும் மனஅழுத்தம் குறித்து மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை ஏற்படுத்திய அதிர்வலை இன்னும் அடங்கவில்லை.

இளம் வயதில் உயர் பொறுப்பில் இருந்த ஒருவர், வாழ்வில் தனது இலக்கு பற்றி தெளிவாக இருந்த ஒருவர், தன்னைத்தானே செதுக்கி உயர்ந்த ஒருவரின் இந்த விபரீத முடிவு, வேதனைக்கு இணையாக வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

டி.ஐ.ஜி. விஜயகுமார், 'அப்சசிவ் கம்பல்சிவ் டிசாடர்' (ஓ.சி.டி.) எனப்படும் மனஅழுத்த பிரச்சினையால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். தனது பிரச்சினை குறித்து நெருங்கிய வட்டத்தில் பேசவும் செய்திருக்கிறார். ஆனால் ஒரு காலை வேளையில், யாரும் எதிர்பாராத நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது.

டி.ஐ.ஜி. விஜயகுமாரின் பணியிலோ, குடும்பத்திலோ பெரிதாக எந்த பிரச்சினையும் தெரியாத நிலையில், மனஅழுத்தம்தான் அவருக்கு மரணத்தை கொண்டுவந்துவிட்டது.

மறைந்திருந்து தாக்கும் இந்த மனஅழுத்தமே அடுத்த 10 ஆண்டுகளில், வேறு எந்த வியாதியையும் விடவும் நாடுகளுக்கு பெரும் சுமையாக மாறும் என்று கூறுகிறது உலக வங்கி.

முன்வரிசையில் இந்தியா

நமது இந்தியா, இப்போதே உலகின் மனஅழுத்த தலைநகரமாக திகழ்கிறது என்பது மிகைப்படுத்தல் இல்லாத செய்தி.

இந்தியாவில் இப்போது 3-ல் ஒருவருக்கு மனஅழுத்த அறிகுறிகள் இருக்கின்றன என்றால், நிலைமையின் தீவிரம் புரியும். உலகிலேயே மனஅழுத்த பிரச்சினை கொண்டோர் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை ஒலி எழுப்புகிறது.

லான்செட் உளவியல் இதழில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'இந்திய மாநிலங்களில் மனநல பிரச்சினைகளின் சுமை' கட்டுரையின்படி, 2017-ம் ஆண்டளவில் நாட்டில் சுமார் 20 கோடி பேர் பல்வேறு மனநல பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தனர். அதாவது 7 பேரில் ஒருவர் அல்லது மொத்த மக்கள்தொகையில் 14.3 சதவீதம் பேர்.

சர்வதேச அளவில் என்று பார்த்தால், 30 கோடிக்கு மேற்பட்டோர், மனஅழுத்தத்தால் அல்லல்பட்டு வருகின்றனர். ஒருவர் இயல்பாக பேசுகிறார், சிரிக்கிறார், அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்பதால் அவருக்கு மனஅழுத்த பாதிப்பு இல்லை என்பதில்லை. வசதியில், சமூக அந்தஸ்தில் உயர்நிலையில் இருக்கிறார் என்பதற்காக மனநல பிரச்சினை இருக்காது என்று கூறுவதற்கில்லை.

ஆழ்கடலுக்குள் உள்ள எரிமலையாக அது எவருக்குள்ளும் வெளித்தெரியாமல் அமைதி காக்கக்கூடும். என்றாவது ஒருநாள் திடீரென அது வெடிக்கக்கூடும்.

உரிய நேரத்தில் கவனிக்கப்பட்டு, முறையான சிகிச்சை அளிக்கப்படாத மனஅழுத்தம் முற்றலாம், விபரீத விளைவுகளுக்கு இட்டுச் செல்லலாம். கடும் மனஅழுத்தத்துக்குள்ளான நபரால், அவருக்கு நெருங்கியவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றாலும், சுயஅபாயத்துக்கான வாய்ப்பே அதிகம். தன்னைத்தானே மரண பள்ளத்தாக்கில் தள்ளிவிடச் செய்துவிடக்கூடும்.

மனஅழுத்தத்துக்கு உள்ளான அனேகம் பேர் தங்களுக்கு தற்கொலை எண்ணம் வந்து சென்றதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். தாமே உயிரை மாய்த்துக்கொண்டவர்களில் 18 சதவீதம் பேர், ஏற்கனவே அதற்கான முயற்சிகளில் தோல்வி கண்டவர்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

மாறிவரும் சமூக, பொருளாதார சூழ்நிலை, மனஅழுத்தத்துக்கு ஒரு மிகப்பெரிய காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. குடும்பம், படிப்பு, வேலையில் அதிகரித்துக்கொண்டே செல்லும் சவால்கள் ஒரு சாதாரண மனிதனை மூச்சுத்திணற செய்கின்றன. பலர், வெளியே தெரியாமல் உள்ளுக்குள் அலறி கொண்டிருக்கிறார்கள். யாராவது ஒருவர் தமக்கு ஆறுதல் கரம் நீட்ட மாட்டார்களா என்று தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மூத்தவர்கள் ஆறுதல்

முன்பெல்லாம் குடும்பத்தில் ஒருவர் சுணங்கும்போதும், துவளும்போதும் அவர்களை தேற்றவும், ஆற்றுப்படுத்தவும் மூத்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் அரிய இனமாகிவிட்ட இன்றைய நிலையில், அந்த இடத்தை சமூக ஊடகங்கள் எடுத்துக்கொள்ள முயல்கின்றன. அவற்றில் அள்ளிவிடப்படும் அறிவுரைகளில் எத்தனை உத்தமமானவை என்பது அலசலுக்குரிய விஷயம்.

இன்று பொதுவாக எல்லா விஷயங்களிலும் விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. அவற்றுடன் ஒப்பிடும்போது, மனம் சார்ந்த விஷயங்கள், பிரச்சினைகள் குறித்த புரிதல் குறைவுதான்.

எங்கே தனக்கு இந்த மாதிரி அடிக்கடி தோன்றுகிறது, பிரச்சினை உள்ளது என்று பேசினால் தன்னை தவறாக எண்ணிவிடுவார்களோ என்ற பயம், கூச்சம், தயக்கம் பலருக்கு இருக்கிறது. அதற்கு அவசியமில்லை, பிற உடல்நல பிரச்சினைகளைப் போல இதுவும் ஒரு பிரச்சினைதான், சரிப்படுத்தக்கூடியதுதான் என்ற தெளிவு ஏற்பட வேண்டும். தங்களின் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் அல்லது தகுதிவாய்ந்த நபரிடம் மனம் திறக்க வேண்டும்.

குடும்பத்தினர், நண்பர்களும், தங்கள் அன்புக்குரியவர்கள், நெருங்கியவர்களின் அன்றாட செயல்பாடுகள், நடத்தையில் ஏற்படும் மாற்றத்தை கவனித்து, கனிவோடு அணுகி, இயல்புக்கு திரும்ப உதவ வேண்டும்.

இனம்புரியாத சோகம், விரும்பிச் செய்யும் செயல்களில் குறையும் ஆர்வம், சோர்வு, அன்றாட நடவடிக்கைகளில் தடுமாற்றம், ஞாபகமறதி போன்றவை மனஅழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கலாம். சோர்வு, பசியுணர்வில் மாற்றம், அதிகரிக்கும், குறையும் தூக்கம், படபடப்பு, பதற்றம், கவனக்குறைவு, முடிவெடுக்க இயலாமை, தகுதியற்றவராகவோ, குற்ற உணர்வாகவோ உணர்தல், நம்பிக்கையற்ற நிலை, தன்னைத்தானே வருத்திக்கொள்ளுதல் போன்றவையும் கவனிக்க வேண்டியவை.

மன பாதிப்புகளைப் போல, செரட்டோனின், டோபமைன் போன்ற 'இயக்குநீர்' (ஹார்மோன்) சுரப்பு குறைபாடும் மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம், பிற உடல்நல பாதிப்புகளைப் போல இதையும் உரிய சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எல்லா விஷயங்களையும் போல மனஅழுத்தத்தையும் முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால் இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம், பல இன்னுயிர் இழப்புகளைத் தடுக்கலாம். இதுவும் ஒரு தனிமனித, சமூக கூட்டுப்பொறுப்புதான்.

இன்றைய சமுதாயத்தில் மனஅழுத்தம் அதிகரித்திருக்கிறதா? என்பது குறித்து மனநல மருத்துவ நிபுணர்கள் மட்டும் அல்லாது, வேறு சிலரிடமும் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறியதாவது:-

தற்கொலை தீர்வு அல்ல

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பல் டாக்டர் சரண்யா அசோக் கூறியதாவது:-

தற்போது மன அழுத்தத்தால் தற்கொலைகள் பெருகி வருகின்றன. 100-க்கு 40 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மன அழுத்தம் பல்வேறு வகைகளில் உள்ளது. பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மன அழுத்தம், பணியில் இருப்பவர்களுக்கு மனஅழுத்தம், கணவன்-மனைவிகளுக்கு இடையே மன அழுத்தம், வயதானவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் பண பிரச்சினைகளால் ஏற்படும் மன அழுத்தம் என பலவகை உள்ளது.

மன அழுத்தத்திற்கு உட்பட்டவர்கள் டாக்டரை அணுகி மருத்துவம் செய்து அதிலிருந்து விடுபடலாம். இதற்கு தற்கொலை தீர்வு அல்ல. மன அழுத்தத்தால் ஏற்படுத்தப்படும் தற்கொலைகள் கோழைத்தனமானவை.

விழிப்புணர்வு

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த வக்கீல் தங்கமணி:-

தமிழகத்தில் மன அழுத்தத்தால் தற்கொலைகள் பெருகி வருகின்றன. அதற்கு காரணம் விழிப்புணர்வு இல்லாதது. மன அழுத்தத்திற்கு உட்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை கொடுக்கின்றனர்.

ஒரு சில மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் பெற நீதிமன்றத்தை அணுகலாம். இதன் மூலமும் தீர்வுகள் உள்ளன. கோழைத்தனமான முடிவுகளால் தற்கொலைக்கு செல்கின்றனர். இதனை தவிர்க்க வேண்டும். இதற்காக அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

மூச்சுப்பயிற்சி

விருதுநகரை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஜெயக்குமார்:-

மன அழுத்தத்தை குறைப்பதற்கு யோகாவில் நல்ல வழிமுறைகள் உள்ளன. முதலில் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு சிரசாசனம், ஏகபாத ஆசனம், பத்மாசனம், வஜ்ராசனம் ஆகிய யோகாசனங்களை செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து பிராணாயாம பயிற்சி அதாவது மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும்.

இதனை தொடர்ந்து மேற்கொண்டால் மன அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

நடைபயிற்சி

அருப்புக்கோட்டையை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் ராஜமோகன்:-

மன அழுத்தத்தில் இருந்து விடுபட அதிகாலையில் எழுந்து எளிமையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி செய்ய வேண்டும். தனிமையில் இருக்கும்போது தியான பயிற்சியும், யோகா பயிற்சியும் செய்ய வேண்டும்.

நம்மைச்சுற்றி நல்ல நண்பர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நம் கருத்துகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதனால் மன அழுத்தம் என்ற பிரச்சினையே வராது.

தேர்வு பயம்

சிவகாசி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் அய்யனார்:-

கடந்த காலங்களை விட தற்போது மன அழுத்தநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளிக்கிழமை தோறும் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை பெற வாரந்தோறும் 60 பேர் வரை வந்து செல்கிறார்கள். இந்த நோயால் 20 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

மாணவர்கள் பலர் மனஅழுத்த நோயால் பாதிக்கப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. தேர்வு பயம் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். மனஅழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனை பயன்படுத்திக்கொண்டு இந்த நோயில் இருந்து விடுபடலாம்.

மனதின் எண்ணங்கள்

ராஜபாளையம் யோகா பயிற்சியாளர் நிராத்தி லிங்கம்:- நமது உடலில் மன அழுத்தம் இருந்தால் நாடி சுத்தி பிரயாணம் செய்ய வேண்டும். இதனால் மன அழுத்தம் குறையும். உடலில் எவ்வளவு மன அழுத்தம் இருக்கிறதோ அவ்வளவு டென்ஷன் ஏற்படும். இதுபோல் ஏற்படாமல் இருக்க தியானப் பயிற்சி செய்ய வேண்டும்.

உட்கார முடியாதவர்கள் கீழே படுத்து இரு கால்களையும் அகலப்படுத்தி மூச்சை நன்கு இழுத்து பயிற்சி செய்தால் உடலில் மன அழுத்தம் ஏற்படாது. மனதில் பல எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் தற்கொலைக்கான காரணத்தை தேட செய்யும். இதை மறக்க ஒவ்வொரு மனிதனும் மனதை ஒருநிலைப்படுத்தி மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


மன அழுத்தம் போக்கும் உணவு வகைகள்

ஆரஞ்சு பழ ஜூஸ் குடிப்பதன் மூலம் உடலும், மனமும் கொஞ்சம் புத்துணர்ச்சி அடையும். இதில் உள்ள வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை மன அழுத்தம் போக்கும். அதேபோல் கீரைகள், ஆவகேடோ பச்சைக்கீரைகள், இலைக்காய்கறிகளில் அதிக அளவு மெக்னீசியம் உள்ளது. இவற்றை சாப்பிடலாம். ஆவகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் 14 வகையான நுண்சத்துக்கள் உள்ளன. அதில் உள்ள செரடோனின் மன அழுத்தத்தை குறைக்கிறது. நார்ச்சத்து உணவுகள் மன அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு உண்டு. அவை 'செரடோனின்' என்கிற ஹார்மோனை சுரக்க வைக்கிறது. இது மூளையை அமைதியாக வைத்திருக்க உதவும். மீன் உணவுகள், பசலைக் கீரை மன உளைச்சலை குறைக்க செய்யும் என்பது எவ்வளவு உண்மையோ அதேபோல மீன் உணவில் அதிகமாக இருக்கும் ஒமேகா-3 என்கிற கொழுப்புச் சத்தும் மனஅழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மன அழுத்தம் இருப்பவர்கள், பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை வாரத்துக்கு மூன்று முறை 15 கிராம் உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால், ரத்தத்தில் சர்க்கரை, கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், இவற்றை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் எண்ணெய் வகைகள் மற்றும் இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது நல்லது என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்.


இளைஞர்களின் தயக்கம்

உலகிலேயே அதிகமான இளையோரை கொண்ட இளமையான தேசங்களில் ஒன்று இந்தியா என்பது நமக்கு பெருமை என்றால், அவர்களில் கணிசமானோர் மனஅழுத்தத்தால் வாடுகின்றனர் என்பது கவலை தரும் சிறுமை. ஐக்கிய நாடுகள் வரையறையின்படி, 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டோர், இளையோர். இந்திய மக்கள்தொகையில் இவர்கள் 10 சதவீதம். இந்த பிரிவினர் மத்தியில் நிலவும் மனஅழுத்த விகிதம் 31 முதல் 57 சதவீதம் என்பது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயம். இந்த வயதினரில் 2-வது அதிகமாக உயிரைப் பறிப்பது, மனஅழுத்தத்தால் ஏற்படும் தற்கொலை முடிவு என்பது அதிர்ச்சி தகவல். சர்வதேச அளவில் ஒப்பிடுகையில், மன நெருக்கடி குறித்து வெளிப்படையாக பேசி, அதற்கு தீர்வு காணவும் இந்திய இளைஞர்கள்தான் அதிகம் தயக்கம் காட்டுகின்றனர் என்கிறது ஒரு பன்னாட்டு ஆய்வு.


ஆனந்த அரட்டை

இந்திய இளைய சமுதாயத்மரணத்தில் தள்ளும் மனஅழுத்தம் குறித்து மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தை அதிகம் மனஅழுத்தத்தில் தள்ளுவது, படிப்பில் ஜொலிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் என்பது ஆச்சரியம் அளிக்கும் தகவல் அல்ல. அதேபோல, அதிகபட்ச சமூக ஊடக உலாவலும் மனநலத்தைச் சீர்குலைக்கிறது. அதனால் தமக்குத்தாமே ஏற்படும் தேவையற்ற, பொருத்தமற்ற ஒப்பீடு, சுயமரியாதை குறைவு, தனிமை, விரக்திக்கு வித்திடுகிறது என்கிறது ஓர் ஆய்வு. பொதுவாகவே தற்போது ஆரோக்கியமான நேரடி விவாதங்கள், ஆனந்தமான அரட்டைகள் குறைந்துவிட்டன. வீட்டுக்குள்ளும் அத்தியாவசியத்துக்கு மட்டுமே என்ற அளவில் வார்த்தைகள் சுருங்கி வருகின்றன. இவையெல்லாம் மனஅழுத்தத்துக்கான சிறுசிறு காரணிகளே. இரவில் தனித்தனியே நெடுநேரம் செல்போன் ஒளிரும் வீடுகளில், கண்ணுக்கு தெரியாத இருள் சூழ்கிறது.


Next Story