தீபாவளி பண்டிகை: கும்பகோணம் கோட்டம் சார்பில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கம்


தீபாவளி பண்டிகை: கும்பகோணம் கோட்டம் சார்பில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 6 Nov 2023 7:00 AM GMT (Updated: 6 Nov 2023 7:43 AM GMT)

சொந்த ஊர்களுக்குச் செல்ல பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை,

அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் ஆர். மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி பயணம் செய்ய ஏதுவாக கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு வருகிற 9-ந் தேதி (வியாழக்கிழமை) 250 கூடுதல் பஸ்களும், 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 750 கூடுதல் பஸ்களும், 11-ந் தேதி (சனிக்கிழமை) 520 கூடுதல் பஸ்களும் இயக்கப்படுகின்றன.

மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்துக் கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 9-ந் தேதி 100 கூடுதல் பஸ்களும், 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 250 கூடுதல் பஸ்களும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பஸ்கள் , தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து பஸ்கள் இயக்கப்படும்.

இதேபோல் கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பஸ்கள், கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.

மேலும் தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 12, 13, 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் மேற்குறிப்பிட்டவாறு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக கீழ்குறிப்பிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதி செய்யப்பட்டுவருகிறது. அதன்படி சென்னையில் இருந்து திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, காரைக்குடி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, வேளாங்கண்ணி, திருவாரூர், கோயம்புத்தூர், ராமேஸ்வரம், கொடைக்கானல் ஆகிய ஊர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்பகூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story