தீபாவளி பண்டிகை: ரெயிலில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்


தீபாவளி பண்டிகை: ரெயிலில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்
x

தீபாவளி பண்டிகையையொட்டி ரெயிலில் டிக்கெட் முன்பதிவு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால், ரெயில், பஸ்களில் கூட்டம் அலைமோதி காணப்படும். ரெயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பாக ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை (12-ந்தேதி) முதல் தொடங்குகிறது. நாளை காலை 8 மணி முதல் ரெயில் டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

நாளை முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9-ந்தேதியும், 13-ந்தேதியில் முன்பதிவு செய்தால் நவம்பர் 10-ந்தேதியும், 14-ந்தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 11-ந்தேதியும், 15-ந்தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 12-ந்தேதியும் பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தமுறை ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் தீபாவளி பண்டிகை வருவதால் வியாழக்கிழமையில் இருந்தே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க பயணிகள் விரைந்து முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story