நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை - மக்களிடம் கருத்து கேட்கும் தி.மு.க.


நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை - மக்களிடம் கருத்து கேட்கும் தி.மு.க.
x

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்கு பரிந்துரைகளை அனுப்ப பொதுமக்களுக்கு தி.மு.க. தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை தி.மு.க. துவங்கியுள்ளது. இதற்காக பொதுமக்களிடம் கருத்துக்கேட்கும் நடைமுறை துவங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்கு பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாகவோ, சமூகவலைதளங்கள் மூலமாகவோ, தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப பொதுமக்களுக்கு தி.மு.க. தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - DMKManifesto2024-க்கான உங்கள் பதிவுகளை வரவேற்கிறது.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும், மாநில சுயாட்சியை உரத்துச் சொல்வதற்குமான தேர்தல்!

நாடாளுமன்றத் தேர்தல் 2024-க்கான திமுக தேர்தல் அறிக்கையை வடிவமைப்பதில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு எதிர்பார்க்கிறது!

தங்களின் கோரிக்கைகளை அனுப்பி வைத்து, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் பங்களிக்க முடியும்!

எழுத்துப்பூர்வமாக நீங்கள் சமர்ப்பிக்கலாம்:

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, அண்ணா அறிவாலயம், எண் 367/369, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600018 என்ற முகவரிக்கு கடிதங்கள் மூலமாகவோ அல்லது dmkmanifesto2024@dmk.in-இற்கு மின்னஞ்சல்கள் அனுப்புவதன் மூலமாகவோ உங்கள் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களின் தேவைகளை புரிந்துகொள்வதில் திமுக தேர்தல் அறிக்கைக் குழு மிகவும் ஆர்வமாக உள்ளது.

தொலைபேசி எண் மூலம் பகிருங்கள்:

#DMKManifesto2024 என்ற ஹேஷ்டேக்குடன் [@DMKManifesto2024] எங்களுக்கு ட்வீட் செய்யுங்கள் அல்லது உங்கள் பதிவுகளை பேஸ்புக் பக்கம் - DMKManifesto2024 அல்லது வாட்ஸ்அப் எண் 9043299441 மூலம் உங்கள் பரிந்துரைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

டவுன் ஹால் கூட்டங்களில் பங்குபெறுங்கள்:

வரவிருக்கும் நாட்களில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் அறிக்கைக் குழு பயணித்து டவுன் ஹால் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, உங்கள் கருத்துகளை நேரில் தெரிவிக்கலாம்.

ஆன்லைன் படிவங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம்:

QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், உங்களின் தேர்தல் அறிக்கை பரிந்துரைகளை ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும்!

உங்களின் கோரிக்கைகள் அல்லது பரிந்துரைகள் திமுகவின் தேர்தல் அறிக்கையை வடிவமைக்க உதவிகரமாக இருக்கும். அவை நம் சமூகத்தின் பல்வேறு தேவைகள் மற்றும் விருப்பங்கள் தேர்தல் அறிக்கையில் எதிரொலிப்பதை உறுதிசெய்யும். வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு தி.மு.க. அறிக்கை குழு அர்ப்பணிப்புடன் உள்ளது.

தேர்தல் அறிக்கை பதிவீடுகளுக்கான காலக்கெடு 25.02.2024 வரை உள்ளது. அதன் பிறகு, ஒரு விரிவான அறிக்கையை உருவாக்க, பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் திமுக அறிக்கை குழு மதிப்பீடு செய்து அதிகாரபூர்வத் தேர்தல் அறிக்கையை வெளியிடும்.

மக்களாட்சி நடைமுறையின் ஒருங்கிணைந்த பகுதியாக நீங்கள் இருப்பதற்கு நன்றி.

தமிழ்நாட்டை சுயாட்சி மாநிலமாகவும், இந்தியாவின் முன்னோடி மாநிலமாகவும் நாம் ஒன்றிணைந்து உருவாக்குவோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story