தி.மு.க. - வி.சி.க. இடையே நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை


தி.மு.க. - வி.சி.க. இடையே நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
x

தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. - வி.சி.க. இடையே நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தி உள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியையும் தி.மு.க. ஒதுக்கியுள்ளது. அதனைத்தொடர்ந்து மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தி.மு.க. கூட்டணியில் தற்போது வரை 4 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நடந்து முடிந்து, 6 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடையே நாளை (சனிக்கிழமை) 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது. அப்போது முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வி.சி.க.வை பொருத்தவரை, ஏற்கெனவே சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் ரவிக்குமார் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில், வி.சி.க.வின் பானை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.


Next Story