மதுபோதையில் வாக்குவாதம்: தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை - நண்பர்கள் வெறிச்செயல்


மதுபோதையில் வாக்குவாதம்: தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை - நண்பர்கள் வெறிச்செயல்
x

தொழிலாளியை கல்லால் அடித்துக்கொன்ற அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே உள்ள ஓலையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அந்தோணிகுமார் (வயது 38). எலக்ட்ரீசியன், இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே ஊரை சேர்ந்தவர்கள் பெரியசாமி மகன் ஜெய்சங்கர் (35) சந்தியாகு மகன் குழந்தைராஜ் (34). நண்பர்களான இவர்கள் 3 பேர் மீதும் மணிகண்டம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அந்தோணிகுமார், ஜெய்சங்கர், குழந்தைராஜ் ஆகிய 3 பேரும் ஓலையூர் கிராமத்தை ஒட்டி உள்ள பாலன் நகர் திறந்தவெளி பகுதியில் மது அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது, போதையில் இருந்த அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஆத்திரம் அடைந்த குழந்தைராஜ், ஜெய்சங்கர் ஆகிய இருவரும் சேர்ந்து அந்தோணிகுமாரை கைகளால் தாக்கினர். மேலும் ஆத்திரம் தீராத, அவர்கள் அங்கு நிலத்தை அளந்து அடையாளத்துக்காக வைக்கப்பட்டு இருந்த கல்லை பிடுங்கி தலை மற்றும் கழுத்தில் அடித்தனர். இதில் அவர், ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

இதனிடையே ஜெய்சங்கர், 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து தனது நண்பர் கீழே விழுந்து காயமடைந்து கிடப்பதாகவும் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அந்தோணிகுமாரை சோதனை செய்ததில் அவர் இறந்தது தெரியவந்தது.

இதற்கிடையில் குழந்தைராஜ், ஜெய்சங்கர் ஆகியோர் சேர்ந்து அந்தோணிகுமாரை கொலை செய்த விவரத்தை ஊர் முக்கியஸ்தர்கள் மணிகண்டம் போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பின், ஊர் மக்களால் பிடித்து வைக்கப்பட்டு இருந்த ஜெய்சங்கர், குழந்தைராஜ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் திருச்சி ஜே.எம்.4 கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story