தஞ்சை பெரிய கோவிலில் வியக்க வைக்கும் துவார பாலகர் சிலைகள்


தஞ்சை பெரியகோவிலில் வியக்க வைக்கும் துவாரபாலகர் சிலைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சை பெரியகோவிலில் வியக்க வைக்கும் துவாரபாலகர் சிலைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டம் கோவில்கள் நிறைந்த பகுதியாகவும் திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றவையாகும். மேலும் தமிழர் கட்டிட கலைக்கு சான்றாக விளங்கும் இந்த கோவில் அற்புதமான கட்டிட கலை அம்சத்தை கொண்ட இந்திய கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

இன்று உலகமே வியக்கும் வகையில் தமிழர்களின் கட்டிட கலைநுட்பத்துக்கு சான்றாக யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரத்துடன் தலை நிமிர்ந்து நிற்கிறது.

பக்தர்கள் வருகை

இத்தகைய தமிழ் கலாசாரத்தின் கவுரவ சின்னமாக திகழும் தஞ்சை பெரியகோவில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இதனால் பெரியகோவிலுக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

வியக்க வைக்கும் சிலைகள்

தஞ்சாவூர் பெரியகோவிலில் வியக்க வைக்கும் சிலைகள் நிறைய இருக்கின்றன. இதில், சிற்பங்கள் ஒவ்வொன்றும் அக்கால நிகழ்வுகளை எடுத்துக் காட்டுவது மட்டுமல்லாமல், கருத்தையும் உணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு சிற்பம் கற்பனையின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது.இக்கோவிலின் இரண்டாம் நுழைவு ராஜராஜன் வாயிலில் மிகப் பிரமாண்டமான இரு துவாரபாலகர் சிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தலா 18 அடி உயரம் உடையவை. இச்சிலைகளில் ஒன்றான இடதுபுறம் உள்ள சிலைதான் வியப்பை அளிக்கிறது.

யானையை விழுங்குவது போல

இதில், துவாரபாலகரின் வலது கால், அவரது காலடிக்குக் கீழ், ஒரு பொந்தில் இருந்து வரும் மலைப்பாம்பு, எலியைக் கவ்வுவது போல ஒரு பெரிய யானையைத் தனது வாயில் கவ்விக்கொண்டு இருக்கிறது.யானையின் பின் பகுதி முழுவதும் அந்த மலைப்பாம்பின் வாய்க்குள் இருக்கும் நிலையில், அதன் தலையும், முன் கால்கள் மட்டுமே வெளியே தெரிகின்றன. அதாவது ஒரு யானையை விழுங்கும் அளவுக்கு அந்த மலைப்பாம்பு எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும்? அந்த மலைப்பாம்பு மிகப்பிரம்மாண்டம் என்றால், அது சுற்றிக் கொண்டு இருக்கும் காலுக்குச் சொந்தக்காரரான துவாரபாலகர் இன்னும் எவ்வளவு பெரியவராக இருக்க வேண்டும்? அவர் மிகப் பெரியவர் என்றால், அவருடைய காவலில் உள்ளே இருக்கும் அவருடைய எஜமானரான சிவன் இன்னும் எவ்வளவு பெரியவராக இருக்க வேண்டும் என்பதை நம் கற்பனையின் உச்சிக்குக் கொண்டு போன அச்சிற்பியின் பின்னணியில் இருக்கும் மாமன்னன் ராஜராஜனின் திறமை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் பெரியவர் என்று மமதையில் செல்ல கூடாது என்றும் நம்மை விட பெரியவர் உள்ளே இருக்கிறார் என்ற தத்துவத்தை உலகுக்கு எடுத்து சொல்லும் விதமாக உள்ளது. வியக்கத்தக்க உள்ள இந்த சிலைகளை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.


Next Story