ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி முடிவு..!


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி முடிவு..!
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை தனது நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களத்தில் இறக்கி விடப்பட்டு உள்ளார்.

தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது. நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை ஈரோட்டில் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார்.

இந்தநிலையில் அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

சற்று நேரத்தில் மேலும், 5 பேர் அதில் இணைக்கப்பட்டனர். இந்த நிலையில், கூடுதலாக 6 பேர் அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதில், அமைப்பு செயலாளர்கள் கே.கோபால், எஸ்.வளர்மதி, டி.ரத்தினவேல், எஸ்.ஆசைமணி, சிவா.ராஜமாணிக்கம், முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதற்கான அறிவிப்பை அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை தனது நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . தொகுதியில் மொத்தமுள்ள 238 பூத்களில் வெளியூர் கட்சி நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிகிறது.


Next Story