

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். அவர்களை நேற்று தமிழக முதல் அமைச்சர் நேரில் நலம் விசாரித்தார்.
இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது, சிகிச்சை பெற்றுவருபவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த அவர், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிந்தார். மேலும், அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவேண்டும் என்றும் மருத்துவர்களிடம் அவர் கூறினார்.
அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.