இந்தியாவிலேயே மின் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான் - அமைச்சர் செந்தில் பாலாஜி


இந்தியாவிலேயே மின் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான் - அமைச்சர் செந்தில் பாலாஜி
x
தினத்தந்தி 14 Sep 2022 10:12 AM GMT (Updated: 14 Sep 2022 10:32 AM GMT)

இந்தியாவிலேயே மின் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார்.

சென்னை

சென்னையில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

கேரளாவையும், தமிழ்நாட்டையும் ஒப்பிட்டு பாருங்க. இந்தியாவிலேயே மின் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடுதான்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், கேரளாவுடன் தமிழகத்தை ஒப்பிட்டுப் பார்த்து தமிழகத்தில் என்ன கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதை சரிபார்த்து கூறியிருந்தால், அது சரியாக இருந்திருக்கும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, மின்சார உற்பத்திக்கும், விநியோகத்துக்குமான இடைவெளி ரொம்ப அதிகமாக உள்ளது. அந்த இடைவெளியை சரிசெய்ய வேண்டியுள்ளது. 2006-2011 காலக்கட்டத்தில், 2006-ல் ஏற்கெனவே என்ன மின் தேவை இருந்ததோ, அதைவிட 5 ஆண்டுகளில் 49 சதவீதம் மின் தேவைகள் அதிகரித்திருக்கிறது. அதுவே, கடந்த 5 ஆண்டுகளில் பார்த்தால் 27 முதல் 29 சதவீதம்தான் அதிகரித்துள்ளது.

இந்த 5 ஆண்டுகளில் புதிய தொழிற்சாலைகள், டேட்டா சென்டர் வரவு, ஆண்டுக்கு 10 லட்சம் கொடுக்கக் கூடிய புதிய மின் இணைப்புகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 1 லட்சம் மின் இணைப்புகள், இந்த ஆண்டு கொடுக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் மின் இணைப்புகள். இதையெல்லாம் கணக்கிட்டுப் பார்க்கும்போது, அடுத்த 5 ஆண்டுகளுக்கு 50 சதவீதத்திற்கு மேலாக மின்தேவைகள் ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கான மின் உற்பத்தி திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2016 தேர்தலில் எஸ்.பி.வேலுமணியும், விஜயபாஸ்கரும் தாக்கல் செய்த வேட்புமனுவுக்கும், 2021 வேட்புமனுவுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தால் ரெய்டு சரியா, இல்லையா என புரியும்;சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. அந்த சொத்து விவசாயம் செய்தா வந்தது.

என் மீதுள்ள வழக்கை எதிர்க்கொள்ள நான் தயாராக உள்ளேன்; என் மீதான வழக்கை சரியாக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது, அப்போது விசாரித்தது சரியில்லை என்றுதானே அர்த்தம்; அதை பற்றி சொன்னால் சில கசப்புகள் வெளி வரும் என கூறினார்.


Next Story