தாயின் ஆசையை நிறைவேற்ற ஸ்கூட்டரில் என்ஜினீயர் ஆன்மிக பயணம்


தாயின் ஆசையை நிறைவேற்ற ஸ்கூட்டரில் என்ஜினீயர் ஆன்மிக பயணம்
x
தினத்தந்தி 22 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 6:45 PM GMT)

தாயின் ஆசையை நிறைவேற்ற என்ஜினீயர் ஒருவர் ஸ்கூட்டரில் ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் தனது தாயாருடன் மயிலாடுதுறை பகுதியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை

தாயின் ஆசையை நிறைவேற்ற என்ஜினீயர் ஒருவர் ஸ்கூட்டரில் ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் தனது தாயாருடன் மயிலாடுதுறை பகுதியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.

தாயின் ஆசை

கர்நாடக மாநிலம் மைசூர் போகாதி பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் கிருஷ்ணகுமார் (வயது44). என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு தாயார் சூடா ரத்தினம்மாவை கவனித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, தந்தையின் ஸ்கூட்டரில் ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களுக்கு அவர் தனது தாய் சூடா ரத்தினம்மாவை ஸ்கூட்டரிலேயே அழைத்து சென்று வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு இவர்களுடைய ஆன்மிக பயணம் தொடங்கியது. இதுவரை 61 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் மேற்கொண்டு இருப்பதாக அவர் கூறுகிறார்.

மயிலாடுதுறையில் வரவேற்பு

கடந்த வாரம் தாயுடன் கும்பகோணம் வந்த இவர், நேற்று மயிலாடுதுறை வந்தார். அவர்களை சிவனடியார்கள் வரவேற்று சிவபுரம் வேத ஆகம பாடசாலையில் தங்க வைத்தனர். இதையடுத்து நேற்று காலை பாடசாலை நிறுவனர் சுவாமிநாத சிவாச்சாரியார் முன்னிலையில் கிருஷ்ணகுமார் தனது தாயாருக்கு பாத பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார்.தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் மயிலாடுதுறையில் உள்ள பிரசித்திப்பெற்ற கோவில்களில் வழிபாடு மேற்கொண்டனர். இதையடுத்து நேற்று இரவு அவர் சிதம்பரம் நோக்கி தனது தாயுடன் ஸ்கூட்டரில் புனித பயணத்தை தொடர்ந்தார்.


Next Story