விஜயதசமியையொட்டி நெல்லில் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை


விஜயதசமியையொட்டி நெல்லில் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
x

விஜயதசமியையொட்டி நெல்லில் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

கரூர்

மாணவர் சேர்க்கை

சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் விஜயதசமி தினத்தன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால், அவர்களால் சிறந்த கல்வியை தடையின்றி பெற முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. கல்வி ஆண்டு தொடக்கமான ஜூன் மாதம் பள்ளியில் சேர்ப்பதற்குரிய வயதை சில குழந்தைகள் எட்டியிருந்தாலும், விஜயதசமி தினத்தன்று பள்ளியில் சேர்ப்பதையே சில பெற்றோர்கள் விரும்புகின்றனர். அதன்படி கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விஜயதசமி தினமான நேற்று மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

'அ' எழுத வைத்து...

இதையொட்டி பள்ளிகளுக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து ெசன்றனர். மேலும் பெற்றோர்கள் தங்களது குழந்தையின் கை விரலை பிடித்து, தட்டில் பரப்பி வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் மீது தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ' என்ற எழுத்தை எழுத பழகிக்கொடுத்தனர். பின்னர் அந்த மாணவ-மாணவிகளை பள்ளிகளில் சேர்த்துக்கொண்டனர்.

இதேபோல் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளிலும் விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அதன்படி வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர வந்த குழந்தைகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் சரஸ்வதி படத்திற்கு முன்பு நெல்லில் 'அ' என்ற எழுத்தை எழுத பழகிக்கொடுத்தார். இந்தநிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விஜயதசமியையொட்டி மாவட்டம் முழுவதும் ஏராளமான குழந்தைகள் தங்களின் பள்ளி கல்வி வாழ்க்கையை தொடங்கினர்.


Next Story