முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை வருகிற 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு


முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை வருகிற 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 7 Nov 2023 1:00 AM GMT (Updated: 7 Nov 2023 1:33 AM GMT)

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தர்மபுரி கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கே.பி.அன்பழகன் (வயது 65). இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது 23.5.2016 முதல் 6.5.2021 வரை உள்ள காலகட்டத்தில் கே.பி.அன்பழகன் தனது பெயரிலும், அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் பெயர்களிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இது தொடர்பாக கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந்தேதி கே.பி. அன்பழகன், அவருடைய மனைவி மல்லிகா (56), மகன்கள் சந்திரமோகன் (33), சசிமோகன் (30) உள்பட 5 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து காரிமங்கலத்தில் உள்ள கே.பி.அன்பழகன் வீடு, உறவினர்களின் வீடுகள், அவருக்கு தொடர்புடைய பள்ளிக்கூடம், குவாரிகள், மற்றும் சென்னை, சேலம், தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் உள்பட மொத்தம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகள் தொடர்பான 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்களை கடந்த மே மாதம் தர்மபுரி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 11 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜரானார்கள். இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி விசாரணை நடத்தினார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வருகிற 22- ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story