சிகிச்சைக்கு பின் பிரபல ரவுடி மீண்டும் சிறையில் அடைப்பு


சிகிச்சைக்கு பின் பிரபல ரவுடி மீண்டும் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 20 Feb 2023 6:45 PM GMT (Updated: 20 Feb 2023 6:45 PM GMT)

கடலூர் மத்திய சிறையில் தற்கொலைக்கு முயன்ற பிரபல ரவுடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் அருகே கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் அதிகமான தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான தனசேகர் என்கிற எண்ணூர் தனசேகர் (வயது 42) விசாரணை கைதியாக இருந்து வந்தார்.

இவர் மீது கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையில் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலுடன் தனசேகர் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி இரவு தனக்கு வழங்கப்பட்ட ரத்த கொதிப்பு மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக, அதாவது 21 மாத்திரைகளை உட்கொண்டதாக அவர் சிறை அலுவலர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த தனசேகரை சிறை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

குணமடைந்தார்

பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அவர் குணமடைந்ததை அடுத்து டாக்டர்கள் பரிந்துரையின் படி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் கடலூர் மத்திய சிறையில் நேற்று மதியம் தனசேகர் அடைக்கப்பட்டார். தனசேகர் தற்கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக, கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story