10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 5 July 2023 5:42 PM GMT (Updated: 6 July 2023 9:52 AM GMT)

கீழ்பென்னாத்தூரில் 10அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்,

கீழ்பென்னாத்தூரில் 10அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்

காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கீழ்பென்னாத்தூரில் உள்ள மார்க்கெட் கமிட்டி எதிரில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

இதனையொட்டி அவர்கள் போலீஸ் நிலையம் அருகிலிருந்து புறப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக சென்று போராட்டம் நடைபெறும் இடத்தை அடைந்தனர்.

போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட அவை தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழுமலை, மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தா, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் கோபி என்ற கேசவன், கொள்கை பரப்பு செயலாளர் முனிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் நடராஜன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி துணை செயலாளர் ரமேஷ் கலந்து கொண்டு போராட்டம் குறித்தும், 10 அம்ச கோரிக்கைகளை விளக்கியும் பேசினார்.

தமிழக அரசு நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், மணிலா குவிண்டாலுக்கு ரூ.12 ஆயிரமும், கரும்பு டன்னுக்கு ரூ.5ஆயிரமும், உளுந்து குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரமும், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், மரவள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ.12 ஆயிரமும், பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.50-ம், எருமைப்பாலுக்கு ரூ.75-ம் வழங்க வேண்டும்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்

தமிழக அரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மத்திய அரசு மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என இவை உள்பட 10 அம்ச கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

இதில் இயற்கை வேளாண் விவசாயிகள் கோதண்டராமன், கிருஷ்ணன், தன்னார்வலர்கள் பலராமன், கார்த்திகேயன், மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தா, துணை செயலாளர் காமாட்சி, ஒன்றிய மகளிரணி செயலாளர் பிரியா, முன்னோடி விவசாயிகள் சுப்பிரமணியன், பரந்தாமன், சுந்தரமூர்த்தி உள்பட 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

முடிவில் ஒன்றிய செயலாளர் கோபி என்ற கேசவன் நன்றி கூறினார்.


Next Story