வேளாண் எந்திரங்கள் வாங்க விவசாயிகள் பங்களிப்பு தொகை மட்டும் செலுத்தினால் போதும் -அமைச்சர் தகவல்


வேளாண் எந்திரங்கள் வாங்க விவசாயிகள் பங்களிப்பு தொகை மட்டும் செலுத்தினால் போதும் -அமைச்சர் தகவல்
x

வேளாண் எந்திரங்கள் வாங்க விவசாயிகள் பங்களிப்பு தொகையை மட்டும் செலுத்தினால் போதும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இதுவரை உள்ள நடைமுறையில், விவசாயிகள் மானியத்தில் வேளாண் எந்திரங்களை பெறுவதற்கு, அதற்கான முழு தொகை அதாவது, மானிய தொகையையும், விவசாயிகளின் பங்களிப்பு தொகையினையும் சேர்த்து செலுத்தி, எந்திரங்களை வாங்கிய பின்பு மானியமானது விவசாயிகளுக்கு பின்னேற்பு முறையில் வழங்கப்பட்டு வந்தது. மேலும், இந்த மொத்த தொகையினை வங்கிகளில் கடனாக பெறுவதில், வங்கிகளில் உள்ள சிக்கலான நடைமுறைகளினால் காலதாமதம் ஏற்படுகிறது. வங்கி கடன் பெற்ற பின், மானியத்திற்கும் சேர்த்து விவசாயிகள் வட்டி தொகையினை செலுத்த வேண்டி இருந்தது.

சிறு, குறு விவசாயிகள் வேளாண் எந்திரங்களுக்காகும் மொத்த தொகையினை திரட்டுவதற்கு காலதாமதமாகும் நிலையில், வசதி குறைந்த ஏழை, எளிய விவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெறுவது என்பது அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது.

பங்களிப்பு தொகை செலுத்தினால் போதும்

எனவே, தற்போதுள்ள நடைமுறை மாற்றப்பட்டு, விவசாயிகள் தங்களின் பங்களிப்பு தொகையை மட்டும் (அதாவது எந்திரங்களுக்கான மொத்த தொகையில் இருந்து மானிய தொகையை கழித்து மீதமுள்ள தொகை) நேரடியாக வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அல்லது வினியோகஸ்தர்களுக்கு அல்லது முகவர்களுக்கு செலுத்தினால் போதும் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறு, குறு விவசாயிகள், அதிக எண்ணிக்கையில் வேளாண் எந்திரமயமாக்கும் துணை இயக்க திட்டத்தின் கீழ் பயனடைவதோடு, வேளாண் எந்திரமயமாக்குதலின் முழுமையான நோக்கமும் ஏற்றத்தாழ்வின்றி நிறைவேறும். அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் இத்திட்டத்தின் பலன்கள் சென்றடைந்து வேளாண் வளர்ச்சி உறுதி செய்யப்படும்.

கூடுதல் மானியம்

தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் இத்திட்டத்தில், சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பெண் விவசாயிகள் ஆகியோர் பவர்டில்லர்கள் வாங்கிட 50 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்ச மானிய தொகையான ரூ.85 ஆயிரமும், விசைக்களையெடுப்பான்கள் வாங்கிட அதிகபட்ச மானிய தொகையான ரூ.63 ஆயிரமும் மற்றும் இதர விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் வாங்கிட 40 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்ச மானிய தொகையான ரூ.70 ஆயிரமும், விசைக் களையெடுப்பான்கள் வாங்கிட அதிகபட்ச மானிய தொகையான ரூ.50 ஆயிரமும் கழித்து, மீதமுள்ள தங்களின் பங்களிப்பு தொகையினை விவசாயிகள் இணையவழியிலோ அல்லது வரைவோலை மூலமாகவோ சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது வினியோகஸ்தர் அல்லது முகவருக்கு செலுத்தி பவர்டில்லர் அல்லது விசைக்களையெடுப்பான் எந்திரத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த சிறு, குறு, விவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்பு தொகையினை குறைத்து, அவர்களுக்கு உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள மானியத்துடன், 20 சதவீத கூடுதல் மானியம் மாநில அரசு நிதியில் இருந்து வழங்கப்படுகிறது.

இதன்படி பவர்டில்லருக்கு அதிகபட்சமாக ரூ.34 ஆயிரமும், விசைக்களையெடுப்பான்களுக்கு அதிகபட்சமாக ரூ.25,200-ம் கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது.

இணையவழியில் பதிவு செய்து...

எனவே, ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகள் பவர்டில்லர் மற்றும் விசைகளையெடுப்பான் வாங்கிட அதிகபட்ச மானியமான முறையே ரூ.1,19,000 மற்றும் ரூ.88,200-ம் இதனை கழித்து மீதமுள்ள, தங்களின் பங்களிப்பு தொகையினை விவசாயிகள் இணைய வழியாகவோ அல்லது வரைவோலை மூலமாகவோ சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கோ அல்லது வினியோகஸ்தருக்கோ அல்லது முகவருக்கோ செலுத்தி பவர்டில்லர் மற்றும் விசைக்களையெடுப்பான் எந்திரத்தினைப் பெற்றுக்கொள்ளலாம்.

உழவன் செயலியில் வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு என்ற சேவையில் வேளாண்மை பொறியியல் துறை-மானிய திட்டங்கள் என்ற பிரிவில் தங்கள் விவரங்களை இணைய வழியில் பதிவு செய்து மானியத்தில் பவர்டில்லர், விசைகளையெடுப்பான் வாங்கி பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story