குடும்பத் தகராறில் விஷம் குடித்து தந்தை, மகன் தற்கொலை


குடும்பத் தகராறில் விஷம் குடித்து தந்தை, மகன் தற்கொலை
x

குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூர்

கனகம்மாசத்திரம் அடுத்த அரும்பாக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 48). விவசாயி. இவருக்கு சந்திரா (40) என்ற மனைவியும், காமாட்சி என்கிற மகளும், லோகேஷ் என்கிற மகன் உள்ளனர். இதில் காமாட்சி கல்லூரி படிப்பு முடித்து உள்ளார். மகன் லோகேஷ் (19) திருவள்ளூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் பரசுராமனுக்கும் அவரது மனைவி சந்திராவுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் சந்திரா கோபித்துக்கொண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து மகன் லோகேஷ் தனது அம்மா சந்திராவை சந்தித்து வீட்டுக்கு வருமாறு பலமுறை அழைத்துள்ளார். ஆனால் சந்திரா அரும்பாக்கத்திற்கு வர மறுத்துள்ளார். இதனால் கடந்த புதன்கிழமை வீட்டுக்கு வந்த லோகேஷ் விவசாய நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மகன் குடித்த பூச்சி மருந்தை மருத்துவர்களிடம் காட்ட எடுத்துச் சென்ற பரசுராமனும் தன்னால்தான் மகனுக்கு இந்த நிலைமை என்று கருதி அவரும் பூச்சி மருந்து குடித்தார். பரசுராமன் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரசுராமன், மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story