செங்கல்பட்டு அருகே மாமனார் அடித்து கொலை - மருமகனுக்கு போலீஸ் வலைவீச்சு


செங்கல்பட்டு அருகே மாமனார் அடித்து கொலை - மருமகனுக்கு போலீஸ் வலைவீச்சு
x

செங்கல்பட்டு அருகே மாமனாரை அடித்துக்கொலை செய்த மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் பொன் விளைந்த களத்தூர் பகுதியை சேர்ந்தவர் துலுக்கானம் (வயது 60). விவசாயம் செய்து வருகிறார். அவரது மனைவி சம்பூரணம் (56). இவர்களுக்கு இரண்டு பெண்களும், ஒரு ஆண் மகனும் உள்ளனர். இந்நிலையில் அவரது இரண்டாவது மகள் ஜெயந்திக்கும் அதே பகுதியைச் சேர்ந்த டார்ஜன் (34). என்பவருக்கும் திருமணமாகி இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிவரும் டார்ஜனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது. இதுகுறித்து கேட்க சென்ற மாமியார் சம்பூரணத்தை மருமகன் டார்ஜன் கட்டையால் அடித்து தாக்கிவிட்டு தப்பி ஓடும் போது எதிரே வந்த மாமனார் துலுக்கானத்தையும் கட்டையால் அடித்துள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த துலுக்கானம் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக படுகாயமடைந்த சம்பூர்ணத்தை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் தப்பியோடிய டார்ஜனை தேடி வருகின்றனர்.


Next Story