சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் மறியல்; 50 பேர் கைது


சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் மறியல்; 50 பேர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:45 PM GMT)

சிறப்பு ஓய்வூதிய தொகை ரூ.6,750 வழங்கக்கோரி கள்ளக்குறிச்சியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி


ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும். அரசு சார்ந்த காலிப் பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி அமலாக்க திட்டத்தை சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் முத்துகுமாரசாமி, ஒன்றிய செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாலை மறியல்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷமிட்டபடி, கள்ளக் குறிச்சி- கச்சிராயப்பாளையம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த 50 பேரை கைது செய்து, அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

பின்னர் கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story