கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை


கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை
x

ஜேடர்பாளையம் அருகே மாமியார், கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

சொத்து தகராறு

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் குழந்தாகவுண்டர். இவருடைய மனைவி பாவாயி (வயது 75). இவருடைய மகன் ராசு (55), விவசாயி. இவரது மனைவி சாந்தி (50). இவர்களுக்கு பிரகாஷ் (32) என்ற மகனும், நித்தியா (30) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

சொத்து விற்பது தொடர்பாக பாவாயிக்கும், அவருடைய மகன் ராசுவிற்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நிலத்தை விற்பதற்கு பாவாயி கையெழுத்திட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாவாயி மனவேதனையில் இருந்துள்ளார்.

மாமியார், கணவர் தற்கொலை

இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி இரவு வீட்டில் பாவாயி, வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராசு, இது தொடர்பாக போலீஸ் விசாரிக்கும் என்று பயந்து உடனே அவர் வீட்டில் வைத்திருந்த விஷ மாத்திரையை தின்று உயிருக்கு போராடினார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி சாந்தி மற்றும் குடும்பத்தினர் ராசுவை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கும், பாவாயியை வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பாவாயி, ராசு இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீஸ் விசாரணை

இந்தநிலையில் மாமியார் பாவாயி, கணவர் ராசு இறந்த துக்கத்தில் இருந்த சாந்தி கடந்த 5-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் சாந்தியை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story