மகளிர் காவலர்கள் பொன்விழாவில் 'அவள்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்


மகளிர் காவலர்கள் பொன்விழாவில் அவள் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 17 March 2023 5:29 AM GMT (Updated: 17 March 2023 5:54 AM GMT)

தமிழக காவல்துறையில் பெண் போலீசார் பொன் விழா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோலாகல விழா நடைபெற்றுவருகிறது.

சென்னை,

தமிழக காவல் துறையில் பெண் போலீசின் பொன் விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. 1973-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி, தமிழக காவல் துறையில் பெண் போலீசின் முதல் காலடிச்சுவடை பதிக்க வைத்தார்.

அவர் தொடங்கி வைத்த பெண் போலீஸ் 50 ஆண்டுகளை தொட்டு இன்று ஆண் போலீசுக்கு இணையாக, பெரிய ஆலமரமாக வளர்ந்து நிமிர்ந்து கம்பீரமாக நிற்கிறார்கள்.

1973-ம் ஆண்டு முதல்-முதலில் பெண் போலீஸ் தொடங்கியபோது ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு ஏட்டு, 20 போலீசார் அடங்கிய சிறிய படைதான் இருந்தது. அந்த பெண் போலீஸ் படைக்கு முதல் சப்-இன்ஸ்பெக்டராக தலைமை தாங்கும் பொறுப்பை உஷாராணி பெற்றார். 22 பேருடன் தொடங்கப்பட்ட பெண் போலீஸ், தற்போது 35 ஆயிரத்து 329 பேருடன் தலை நிமிர்ந்து நிற்கிறது.

மகளிர் காவல்துறையில் இணைந்து 50 ஆண்டுகள் தொட்டுள்ள பொன்விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த விழாவில் டிஜிபி, காவல் அதிகாரிகள்,அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

பெண் போலீசின் பொன் விழா முழுக்க, முழுக்க பெண் போலீசாரால்தான் நடத்தப்பட்டது. அணிவகுப்பு மரியாதையும் பெண் போலீசாரால்தான் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அவள் திட்டத்தை முதல் அமைச்சர் தொடங்கிவைத்தார். விழாவையொட்டி சிறப்பு தபால் தலையையும் முதல்-அமைச்சர் வெளியிடுகிறார்.

இன்றைய விழாவில் பெண் போலீசை பெருமைப்படுத்தும் வகையிலும், அவர்களின் நலனை கருத்தில் கொண்டும் பணியிட மாறுதல், துப்பாக்கி சுடும்போட்டி, பெண் காவலர்கள் அணிவகுப்பு மாற்றிவைப்பு உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்பை முதல் அமைச்சர் வெளியிட்டு உள்ளார்.


Next Story