4-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க தடை


4-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க தடை
x
தினத்தந்தி 22 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 6:46 PM GMT)

மண்டபத்தில் பயங்கர கடல் சீற்றம். துறைமுக பகுதியையும் தாண்டி கடல் அலைகள் சீறி எழுந்தது. மீன்பிடி படகு ஒன்று நங்கூர கயிறு அறுந்து கரை ஒதுங்கியது.

ராமநாதபுரம்

பனைக்குளம்

மண்டபத்தில் பயங்கர கடல் சீற்றம். துறைமுக பகுதியையும் தாண்டி கடல் அலைகள் சீறி எழுந்தது. மீன்பிடி படகு ஒன்று நங்கூர கயிறு அறுந்து கரை ஒதுங்கியது.

கடல் சீற்றம்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுவடைந்து வருவதாக வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக நேற்று கடல் சீற்றமாகவே காணப்பட்டது.

மண்டபத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியதுடன் வடக்கு கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாகவே இருந்தது. இதனால் துறைமுகப் பகுதியையும் தாண்டி கடல் அலைகள் ஆக்ரோமாக சீறி எழுந்தது.

மேலும் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு ஒன்றும் நங்கூரக் கயிறு அறுந்து வடக்கு கடற்கரையில் கரை ஒதுங்கி கிடந்தது. கரை ஒதுங்கி கிடந்த இந்த படகை மீட்டு கரையில் ஏற்றி வைத்தனர்.

மீனவர்கள்

புயல் எச்சரிக்கை காரணமாக 4-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக மண்டபம் தெற்கு மற்றும் வடக்கு துறைமுக கடல் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 300-க்கும் அதிகமான நாட்டு படகுகளும் மீன் பிடிக்க செல்லாமல் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.


Next Story