அயலக தமிழர் தின விழா: இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


அயலக தமிழர் தின விழா:  இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 11 Jan 2024 1:38 AM GMT (Updated: 11 Jan 2024 5:38 AM GMT)

சென்னையில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர் பங்கேற்கும் அயலக தமிழர் தின விழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

சென்னை,

தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை 3-ம் ஆண்டாக 'தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளை மையமாக கொண்டு அயலக தமிழர் தின விழாவை, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் நடத்துகிறது.

இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், மந்திரிகள், கல்வியாளர்கள், கவிஞர்கள் பங்கேற்கின்றனர்.வெளிநாடுகளில் வாழும் 1,400-க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்க பதிவுசெய்து உள்ளனர். இதில், 218 சர்வதேச தமிழ் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் ஆகியவற்றை சேர்ந்த வெளிநாடுவாழ் தமிழர்கள் பங்கேற்கிறார்கள்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவை தொடங்கி வைத்து பேசுகிறார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள 40-க்கும் மேற்பட்ட அயலக தமிழர் கண்காட்சி அரங்குகளையும் திறந்துவைக்கிறார். மேலும், கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு அயலக தமிழர்களின் புத்தக வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெறும்.

விழாவில், சிறப்பு நிகழ்ச்சிகளாக 4 கலந்துரையாடல்களும், ஒரு கவியரங்கமும் நடைபெறுகின்றன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளான நாளை (வெள்ளிக்கிழமை) விழா பேருரை நிகழ்த்துவதுடன், 'எனது கிராமம்' என்ற முன்னோடி திட்டத்தையும் தொடங்கிவைக்கிறார்.

இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும் வெளிநாடுவாழ் தமிழர்கள் அதற்குரிய நிதியை அளித்து இந்த திட்டத்தின் வாயிலாக செயல்படுத்த வகை செய்யப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை மந்திரி கா.சண்முகம் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர் நலன், வணிகம், தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு விருதுகள் வழங்குகிறார்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழகத்தில் முதலீடுகள் செய்வதற்கான வசதி வாய்ப்புகள் குறித்து விளக்குவதற்காக ஸ்டார்ட் அப், டிஎன் பேம் உள்ளிட்ட கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன. விழாவுக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் முன்னிலை வகிக்கிறார். அயலகத் தமிழர் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி வரவேற்கிறார்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story