முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்


முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்
x

கோப்புப்படம்

முன்னாள் அமைச்சரும், தி.மு.க. இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

சென்னை,

முன்னாள் அமைச்சரும், தி.மு.க. இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி, சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் இன்று மாலை அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.

இந்திராகுமாரி அ.தி.மு.க. சார்பில் நாட்ராம்பள்ளி தொகுதியில் இருந்து 1991-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 முதல் 1996 வரை பொறுப்பு வகித்தார். தொட்டில் குழந்தை திட்டம் உருவாக முக்கிய காரணமாக விளங்கினார்.

இவர் 2006-ல் தி.மு.க வில் இந்திரா குமாரி தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு தி.மு.க.வில் இலக்கிய அணி மாநிலத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இவரது கணவர் பாபு வழக்கறிஞர் ஆவார். இவர்களுக்கு லேகா சந்திரசேகர் என்ற மகள் உள்ளார்.

இந்திராகுமாரின் உடல் அஞ்சலிக்காக அடையாறு காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. நிர்வாகிகள் பலரும் வந்து அவருக்கு மலரஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி சடங்கு நாளை ( செவ்வாய்கிழமை) பெசன்ட்நகரில் நடக்கிறது.


Next Story