காளியம்மன் கோவிலில் அம்மன் சிலை உடைப்பு


காளியம்மன் கோவிலில் அம்மன் சிலை உடைப்பு
x
தினத்தந்தி 27 Oct 2022 6:45 PM GMT (Updated: 27 Oct 2022 6:45 PM GMT)

திண்டுக்கல்லில் காளியம்மன் கோவிலில் அம்மன் சிைல உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் சவேரியார்பாளையம் அருகே சி.கே.சி.எம். காலனியில் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் வழிபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவில் நடையின் இருபக்கங்களிலும் தலா ஒரு அம்மன் சிலை இருக்கின்றன. இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோவிலுக்கு வந்தனர்.

அப்போது கோவில் நடையின் பக்கவாட்டில் இருக்கும் ஒரு அம்மன் சிலை சேதம் அடைந்து இருந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் சாமி சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து கோவில் நிர்வாகம் தரப்பில், திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த வீராகவுதம் (வயது 24), அஜீஸ் (22), சிராஜிதீன் (25) ஆகியோர் அம்மன் சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story