கலை திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்


கலை திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
x

கலை திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்

2022-23 -ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது பள்ளி கல்வித்துறை அமைச்சர், மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலை திருவிழா போட்டி நடத்தப்படவுள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத்திறன்களை வெளிகொணரும் விதமாகவும், பள்ளி கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 6 முதல் 12-ம் வகுப்புகளில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் 9 மற்றும் 10 -ம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12 -ம் வகுப்பு ஒரு பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் போட்டி நடத்தப்படவுள்ளது, போட்டிகள் தனி நபர் அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம்.

6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கவின்கலை / நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் எனும் 6 தலைப்பின் கீழ் நடத்தப்படும்.

9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கவின்கலை / நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை - தோற் கருவி, கருவி இசை துளை காற்றுக் கருவிகள், கருவி இசை தந்தி கருவிகள், இசை சங்கமம், நடனம், நாடகம், மொழித்திறன் எனும் 9 தலைப்பின் கீழும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காண்கலை / நுண்கலை, இசை வாய்ப்பாட்டு, கருவி இசை, தோற் கருவி, கருவி இசை துளை / காற்றுக்கருவி, கருவி இசை தந்தி கருவிகள், இசை சங்கமம், நடனம், நாடகம், மொழித்திறன் எனும் 9 தலைப்பின் கீழும் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

போட்டிகள் தனி நபராக அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம் ஒருவர் ஏதேனும் 3 தனிப்போட்டி மற்றும் 2 குழுப்போட்டியில் மட்டுமே அதிக பட்சமாக பங்கு பெற முடியும். பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களை (முதலிடம்) வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் (முதலிடம் மற்றும் இரண்டாமிடம்) மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் (முதலிடம்) மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

மாநில அளவிலான கலை திருவிழா இறுதி போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் கலையரசன், கலையரசி விருதுகளும், மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும்.

மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிகையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பள்ளி அளவில் இன்று(புதன்கிழமை) முதல் 28- க்குள் வட்டார அளவில் 29.11.2022 முதல் 5.12.2022-க்குள் மாவட்ட அளவில் 6.12.2022 முதல் 10.12.2022க்குள் வட்டார மற்றும் மாவட்ட அளவில் பங்கு பெறும் மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடைபெற்று சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து வகை அரசுப்பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் இந்த கலை திருவிழா போட்டிகளில் பெருமளவு பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story