இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x

பழனி அருகே, விபத்தில் காயம் அடைந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 50). விவசாய தொழிலாளி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு ஆயக்குடி சந்தைப்பேட்டை பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் ஜோதிமணி படுகாயம் அடைந்தார். இதையடுத்து ஜோதிமணி, தனக்கு விபத்து இழப்பீடு வழங்கக்கோரி பழனி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு, விபத்து இழப்பீடாக கடந்த 2019-ம் ஆண்டு வரை வட்டியுடன் சேர்த்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்து 253 வழங்க உத்தரவிட்டது. ஆனால் விபத்து இழப்பீடு வழங்காமல் அரசு போக்குவரத்து கழகம் காலதாமதம் செய்து வந்தது.

இந்நிலையில் ஜோதிமணி, பழனி கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சப்-கோர்ட்டு நீதிபதி ஹரிகரன், பாதிக்கப்பட்ட ஜோதிமணிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து கோர்ட்டு ஊழியர்கள் நேற்று காலை பழனி பஸ்நிலையத்தில் நின்ற அரசு டவுன் பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் நிறுத்தினர்.


Next Story