விபத்தில் சிக்கிய தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் சிக்கிய தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 24 April 2023 9:00 PM GMT (Updated: 24 April 2023 9:00 PM GMT)

பழனியில் விபத்தில் தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அத்திக்கோம்பை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகைவேல் (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு தனது சைக்கிளில் ஒட்டன்சத்திரம் பகுதியில், திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார். பஸ்நிலையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த அரசு பஸ் அவரது சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கார்த்திகைவேல் படுகாயம் அடைந்தார். அதைத்தொடர்ந்து கார்த்திகைவேல் சார்பில் விபத்து இழப்பீடு கேட்டு பழனி சப்-கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.3 லட்சத்து 82 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்க அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் இழப்பீடு தொகை வழங்கப்படாததால் கார்த்திகைவேல் தரப்பில் பழனி கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த கூடுதல் சார்பு நீதிபதி ஜெயசுதாகர், கார்த்திகைவேலுக்கு வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.5 லட்சத்து 62 ஆயிரத்து 10 வழங்க வேண்டும், இல்லையென்றால் அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று கோர்ட்டு பணியாளர்கள் பழனி பஸ்நிலையத்தில் இருந்து திருச்சி செல்வதற்காக நின்ற அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டு பகுதியில் நிறுத்தினர்.


Next Story