19 மண்டல உதவி கமிஷனர் அலுவலகங்களில் ரேஷன் கார்டுதாரர்கள் குறை தீர்க்கும் முகாம் 21-ந்தேதி நடக்கிறது


19 மண்டல உதவி கமிஷனர் அலுவலகங்களில் ரேஷன் கார்டுதாரர்கள் குறை தீர்க்கும் முகாம் 21-ந்தேதி நடக்கிறது
x

சென்னையில் உள்ள 19 மண்டல உதவி கமிஷனர் அலுவலகங்களில் வருகிற 21-ந்தேதி ரேஷன் கார்டுதாரர்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை

பொது வினியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை நடைபெறும் பொது வினியோக திட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் போகி பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி மாதத்துக்கான மாதாந்திர ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி கமிஷனர் அலுவலகங்களில் வருகிற 21-ந்தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய ரேஷன் கார்டு, நகல் ரேஷன் கார்டு கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், ரேஷன் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும்.

பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் முகாமில் தெரிவித்தால், குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story