பள்ளி மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள்


பள்ளி மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள்
x

பெரம்பலூர் மாவட்ட அளவில் நடந்த பள்ளி மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பெரம்பலூர்

குழு விளையாட்டு போட்டிகள்

பாரதியார் தினம், குடியரசு தின விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட அளவிலான 14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள் எளம்பலூர் இந்திரா நகரில் உள்ள தந்தை ரோவர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. நேற்று மாணவிகளுக்கு எறிபந்து, ஹேண்ட் பால், கோ-கோ, ஆக்கி ஆகிய குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன. போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இதில் ஏற்கனவே பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய குறு வட்ட அளவில் நடத்தப்பட்ட மேற்கண்ட குழு விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த அணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடின.

முதலிடம் பிடித்த அணிகள்

எறிபந்து போட்டியில் 14 வயது பிரிவில் செட்டிகுளம், அரசு மேல்நிலைப்பள்ளியும், 17 வயது பிரிவில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், 19 வயது பிரிவில் லாடபுரம் எம்.ஆர்.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் முதலிடம் பிடித்தது. ஹேண்ட் பால் போட்டியில் 14 வயது பிரிவில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், 17 வயது மற்றும் 19 வயது பிரிவுகளில் கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியும் முதலிடம் பெற்றது. கோ- கோ போட்டியில் 14 வயது பிரிவில் காரை அரசு மேல்நிலைப்பள்ளியும், 17 வயது பிரிவில் எளம்பலூர் இந்திரா நகர் தந்தை ரோவர் உயர்நிலைப்பள்ளியும், 19 வயது பிரிவில் காரை அரசு மேல்நிலைப்பள்ளியும் முதலிடம் பெற்றது. ஆக்கி போட்டியில் 14 வயது பிரிவில் பாடாலூர் ஸ்ரீ அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், 17 வயது பிரிவில் சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், 19 வயது பிரிவில் பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியும் முதலிடம் பெற்றது.

பாராட்டு சான்றிதழ்

போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளின் வீராங்கனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்த அணிகள் மாநில அளவிலான குழு விளையாட்டு போட்டிகளில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர். அதே பள்ளியில் நாளை (புதன்கிழமை) மாணவர்களுக்கு ஹேண்ட் பால், கோ-கோ, எறிபந்து, ஆக்கி, கூடைப்பந்து, டென்னிஸ் ஆகிய குழு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.


Next Story