தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்:கலெக்டர் தகவல்


தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்:கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:45 PM GMT)

தேனி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

தேனி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 2023-24-ம் ஆண்டு ராபி பருவத்தில் தோட்டக்கலைப் பயிர்களான வாழை. கத்தரிக்காய், கொத்தமல்லி, முட்டைக்கோஸ், தக்காளி ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்திட அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அறுவடை முடிந்து 14 நாட்களுக்குள் இயற்கை பேரிடரால் ஏதேனும் இழப்புகள் ஏற்பட்டால் அந்த குறிப்பிட்ட விவசாயி இழப்பீடு பெற தகுதியுள்ளவர் ஆவார். அரசாணையின்படி, தேனி மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட 27 தொகுப்புகளில் விவசாயிகள் வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,430 பிரிமிய தொகை செலுத்திட 29.2.2024 அன்று கடைசி நாளாகும்.

இதேபோல், கத்தரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1,205, முட்டைக்கோஸ் பயிருக்கு ரூ.1,227.50, தக்காளி பயிருக்கு ரூ.927.50 என பிரிமியம் செலுத்திட 31.1.2024 அன்று கடைசி நாள் ஆகும். கொத்தமல்லி பயிருக்கு ரூ.647.50 பிரிமியம் செலுத்திட 18.1.2024 அன்று கடைசி நாள். எனவே பயிர் காப்பீடு செய்திட குறைந்த கால அவகாசமே உள்ளதால், இந்த பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் விண்ணப்பத்துடன் பதிவு கட்டணம். சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் தங்கள் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் அல்லது பொது சேவை மையங்கள் மூலம் பயிர்காப்பீடு செய்து பயன்பெறலாம். இந்த தகவலை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.


Next Story