வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?


வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?
x
தினத்தந்தி 8 April 2024 4:11 AM GMT (Updated: 8 April 2024 4:49 AM GMT)

வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும் பொருட்டு தமிழக சுகாதாரத்துறை தற்காப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தற்காப்பு வழிமுறைகள் பின்வருமாறு:-

உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்கா விடிலும் கூட, போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். ஓ.ஆர்.எஸ். உப்பு சர்க்கரை கரைசல், எலுமிச்சை சாறு, இளநீர், மோர், நுங்கு, தர்பூசணி, கரும்பு சாறு மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும்.

நல்லகாற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்ல வேண்டும். குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்தி விட்டு வெளியே செல்ல கூடாது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது கடுமையான பணிகளை செய்யாமல் இருக்கவும், மது, தேநீர் மற்றும் காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கூடுமானவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். புரதம், மாமிச சத்துள்ள மற்றும் கார வகை உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய், இதயநோய், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் சென்று வேலை செய்பவர்களுக்கு மயக்கம் வருதல் மற்றும் காய்ச்சல் இருப்பதாக தோன்றினால், அவ்வாறு வெப்பத்தால் தாக்கப்பட்ட வரை நிழலான பகுதியில் இளைப்பாறவைத்து, குடிநீர், எலுமிச்சைச்சாறு, இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை கொடுத்து உடலின் வெப்பத்தை சீராக கொண்டு வரவும், அருகில் உள்ள மருத்துவரை உடனே அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story