அணிக்கொரை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்-ரூ.1.26 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்


அணிக்கொரை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்-ரூ.1.26 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 13 July 2023 1:30 AM GMT (Updated: 13 July 2023 1:30 AM GMT)

ஊட்டி ஊராட்சி ஒன்றியம் அணிக்கொரை கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 83 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

நீலகிரி


கோத்தகிரி,


ஊட்டி ஊராட்சி ஒன்றியம் அணிக்கொரை கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 83 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.


மனுநீதி நாள் முகாம்


நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியம் தூனேரி ஊராட்சிக்குட்பட்ட அணிக்கொரை கிராமத்தில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்து பேசுகையில்,


தமிழக அரசின் உத்தரவின்படி மாதம்தோறும் மனு நீதி நாள் முகாம் நடத்தப்பட்டு தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மனு நீதி நாள் முகாம் சம்பந்தமாக 38 மனுக்கள் முன் கூட்டியே பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் தமிழக முதலமைச்சரால் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 2.20 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரகள் உள்ளனர். ஜூலை மாதம் இதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


ரூ.342 கோடி கடனுதவிகள்


இந்த திட்டத்தில் தமிழகம் முழுவதும் 1 கோடி மகளிர் பயன்பெறுவர். காலை உணவு திட்டம் கூடலூர் பகுதியில் 63 பள்ளிகளில் செயல்படுத்தப் பட்டுள்ளது. 2022 - 23 ஆண்டில் கடந்த ஆண்டை விட 42 கோடி ரூபாய் கூடுதலாக சேர்த்து ரூ.342 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பின்னர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை துறை, மகளிர் திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை உள்பட அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.


நலத்திட்ட உதவி


இதையடுத்து 8 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 98.75 லட்சம் ரூபாய் மதிப்பில் வங்கி கடனுதவிகளையும், 2 பயனாளிகளுக்கு 2 லட்சம் ரூபாய் தனி நபர் கடனுதவி, முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டதாஜின் கீழ் 5 பயனாளிகளுக்கு 2.50 லட்சம் ரூபாய் உதவித் தொகை என்பது உள்பட மொத்தம் 83 பயனாளிகளுக்கு 1கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இந்த முகாமில் மகளிர் திட்ட இயக்குனர் பாலா கணேஷ், முதன்மை கல்வி அலுவலர் கீதா, குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக பொறியாளர் செல்வகுமார், வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், தூனேரி ஊராட்சி தலைவர் உமாவதி உள்பட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.






Next Story