போக்குவரத்து போலீசார் தாக்கியதால் தற்கொலை செய்து கொண்ட ஓட்டுநரின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் இழப்பீடு - மனித உரிமை ஆணையம் உத்தரவு


போக்குவரத்து போலீசார் தாக்கியதால் தற்கொலை செய்து கொண்ட ஓட்டுநரின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் இழப்பீடு - மனித உரிமை ஆணையம் உத்தரவு
x

தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனின் தாயாருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை,

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்னையில் கால் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு தரமணி சிக்னல் அருகே அவரது காரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசார், அவரை அவதூறாக பேசியதுடன், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மணிகண்டன் அதே இடத்தில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிக்கைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், போலீசாருக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதியாகி இருப்பதாக தெரிவித்ததுடன், தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனின் தாயாருக்கு இழப்பீடாக ரூ.6 லட்சத்தை 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்த தொகையை சம்பந்தப்பட்ட காவலர்கள் 3 பேரிடம் இருந்து தலா 2 லட்சம் ரூபாயாக வசூலித்துக் கொள்ளவும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story