திருமணமான 2 மாதத்தில் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததால் கொன்றேன்


திருமணமான 2 மாதத்தில் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததால் கொன்றேன்
x

சிதம்பரம் அருகே புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருமணமான 2 மாதத்தில் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததால் கொன்றேன் என்று கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடலூர்

பரங்கிப்பேட்டை,

சிதம்பரம் அருகே உள்ள கீழ்அனுவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் சிலம்பரசன் (வயது 35). இவருக்கும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா அரசூர் கிராமத்தை சேர்ந்த, ரோஜா (25) என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம், திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர், இவர்களது திருமணம் கடந்த மே மாதம் 4-ந்தேதி சிதம்பரத்தில் நடைபெற்றது.

புதுமண தம்பதியினர் அனுவம்பட்டு கிராமத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட ரோஜாவை, சிலம்பரசன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு, பரிசோதனை செய்த டாக்டர் ரோஜா 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதனால் சிலம்பரசனுக்கு, தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது.

கழுத்து அறுத்துக்கொலை

இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவும் சிலம்பரசன் மனைவி ரோஜாவிடம் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது, ஆத்திரமடைந்த சிலம்பரசன், தான் கையில் வைத்திருந்த பிளேடால் ரோஜாவின் கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, சிலம்பரசன் கிள்ளை போலீசில் சரணடைந்தார். அவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் கைது செய்தார்.

தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து, சிலம்பரசன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

யாருடன் தொடர்பு?

எனக்கும் ரோஜாவுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதன் பின்னர், நான் ரோஜா வீட்டிற்கு சென்று வந்தேன். அப்போது, நாங்கள் தனிமையில் உல்லாசமாக இருந்தோம். இந்த நிலையில் கடந்த மே மாதம் எங்களுக்கு திருமணம் நடந்தது.

இதற்கிடையே ரோஜாவை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது, அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்தது எனக்கு தெரிந்தது. அவரது கர்ப்பத்துக்கு வேறு யாரோடு தொடர்பு உண்டா? என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனது மனதுக்குள் ஒரு குழப்பமாகவே இருந்தது. இதனால் நேற்று முன்தினம் ரோஜாவுடன் எனக்கு தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த நான் பிளேடால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மாமியார் மீதும் வழக்குப்பதிவு

தொடர்ந்து சிலம்பரசன் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். இதற்கிடையே சிலம்பரசனின் தாய் சுந்தரி ரோஜாவிடம் நகை, பணம் கேட்டு தினசரி தகராறு போட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், சுந்தரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக சிதம்பரம் உதவி கலெக்டர் சுவேதா சுமன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story