நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை


நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை
x
தினத்தந்தி 20 Oct 2022 2:58 AM GMT (Updated: 20 Oct 2022 5:02 AM GMT)

2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது

சென்னை ,

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

* சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதியியல் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கவும், வெடிக்கவும் வேண்டும்.

* சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மட்டும்தான் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

* சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89-ன்படி பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ கூடாது.

* எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. மோட்டார் சைக்கிள், கார்கள் போன்ற வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட எரிபொருள் கிடங்குகள் அருகே பட்டாசுகளை வெடிக்க கூடாது.

* பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்க கூடாது. * குடிசைகள், ஓலைக்கூரைகள் உள்ள இடங்களில் வாணவெடிகளையோ, எந்தவித பட்டாசு வகைகளையோ கொளுத்தக்கூடாது.

* பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு குடோன்களில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தீ தடுப்பு உபகரணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

* ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், கோர்ட்டுகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் (ஒலி எழுப்ப தடை செய்யப்பட்ட இடங்கள்) பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. * பட்டாசு விற்கும் கடைகள் அருகே புகைப்பிடிப்பதோ, புகைத்த சிகரெட் துண்டுகளை வீசி எறிவதோ கூடாது.

* பட்டாசுகளை வெடிப்பதற்கு நீளமான ஊதுவத்தி உபயோகித்து ஆபத்துகளை தவிர்க்கவும். * கால்நடைகள் அருகே பட்டாசு வெடித்தால் அவைகள் மிரண்டு சாலையில் செல்வோரை தாக்கி விபத்துகளை ஏற்படுத்தலாம். எனவே கால்நடைகள் இருக்கும் இடத்தில் பட்டாசு வெடிக்க கூடாது.

* விதிமுறைகளை மீறி அல்லது உரிமம் இன்றி பட்டாசு விற்றால், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்தால், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

* பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள் மற்றும் கடைவீதிகளில் தகுந்த குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உடைமைகளை விழிப்போடு பாதுகாக்க வேண்டும்.

* பட்டாசு பொருட்கள் பஸ், மோட்டார் சைக்கிள், ரெயில் போன்றவற்றில் எடுத்து செல்ல அனுமதி இல்லை. * நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் இன்றி செல்ல வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க வேண்டும். அதிவேகமாக செல்வதை தவிர்த்து விபத்தின்றி பயணம் செய்ய வேண்டும்.

* மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

* பட்டாசு மூலம் அல்லது வேறு ஏதேனும் விபத்து நேர்ந்தால் போலீஸ்துறை, தீயணைப்பு மட்டும் மீட்பு பணிகள் துறை அவசர உதவி எண்-100, 112 மற்றும் அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண் 108 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து குற்றங்கள் இல்லாத, விபத்தில்லாத தீபாவளியை உறுதி செய்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் இந்த தீபாவளியை கொண்டாட அனைத்து பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story