கோடைவெப்ப தாக்கம்: பொதுமக்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்


கோடைவெப்ப தாக்கம்: பொதுமக்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 April 2023 5:26 AM GMT (Updated: 12 April 2023 6:10 AM GMT)

கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்ள பொதுமக்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

சென்னை

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனரகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கோடைகால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோடை வெப்பம் தாக்க தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை, செங்கல்பட்டு, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. வெப்ப தாக்கத்தின் காரணமாக தீவிர தலைவலி, மயக்கம், படபடப்பு, தசைப்பிடிப்பு, வலிப்பு சுய நினைவு இழத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே வெப்ப தாக்கத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். சி.ஆர்.எஸ். கரைசல் பருக வேண்டும். மேலும், எலுமிச்சை, தர்ப்பூசணி, கிர்ணி பழச்சாறுகள், மோர், லஸ்ஸி போன்றவைகளும் பருக வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள திராட்சை, வெள்ளரிக்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பருத்தியால் ஆன வெளிர் நிறம் கொண்ட மெல்லிய ஆடைகளை அணிய வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், திறந்த வெளியில் வேலை பார்ப்பவர்கள், இதயநோய் உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் வெயிலின் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படுவதால் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

மேலும், வயதானவர்கள், தனிமையில் இருப்பவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெயில் காலங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும்போது மயக்கம், குழப்பம் அல்லது வியர்வையற்று தோல் உலர்ந்து காணப்படுதல் போன்ற அறிகுறியுடன் யாரையாவது கண்டால் உடனடியாக 108 அல்லது 104 அவசர எண்ணை அழைத்து அவர்களுக்கு முதலுதவி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் உமா, தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதிஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் சண்முகக்கனி, மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story