மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு தமிழில் மருத்துவ படிப்பு பாடப்புத்தகங்கள்


மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு தமிழில் மருத்துவ படிப்பு பாடப்புத்தகங்கள்
x

மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு முதல் முறையாக தமிழில் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட இருக்கின்றன. தற்போது மொழிபெயர்ப்பு பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், டிசம்பர் மாதத்துக்கு முன்பு வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழில் மொழிபெயர்ப்பு

இந்தியாவில் முதல் முறையாக மத்தியபிரதேச மாநிலத்தில் இந்தியில் 3 மருத்துவ படிப்பு பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அதேபோல் உத்தரபிரதேசத்திலும் மருத்துவம், என்ஜினீயரிங் பாடப்புத்தகங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் முதல் முறையாக, தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்காக மருத்துவ படிப்பு பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் நடக்கின்றன.

முதல்கட்டமாக, 'கிரேய்ஸ் அனாட்டமி பார் ஸ்டூடன்ட்ஸ்', 'கைடான் அண்ட் ஹால் டெக்ஸ்ட்புக் ஆப் மெடிக்கல் பிசியாலஜி', 'பெய்லி அண்ட் லவ்ஸ் ஷார்ட் பிராக்டீஸ் ஆப் சர்ஜரி (பாகம்-1)', 'முதலியார் அண்ட் மேனன்ஸ் கிளீனிகல் ஆப்ஸ்டெட்ரிக்ஸ்' ஆகிய 4 மருத்துவ பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகம் (டி.என்.டி.இ.எஸ்.சி.) தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வருகிற டிசம்பர் மாதத்துக்கு முன்பு இந்த புத்தகங்களை இவ்வாண்டு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவால் நிறைந்த பணி

தமிழில் மொழிபெயர்க்கும் பணிகளில் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் 30 பேரும், பயிற்சி டாக்டர்களும் ஈடுபட்டிருக்கின்றனர். மொத்தம் 25 மருத்துவ பாடப்புத்தகங்களை மொழிபெயர்க்க திட்டமிட்டிருப்பதாகவும், அதில் 13 பாடப்புத்தகங்கள் முக்கியமான பாடங்களாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்.பி.பி.எஸ். புத்தகங்கள் ஆங்கிலத்தில் உள்ளதால் மாணவர்கள் சிலரால் அதை புரிந்துகொள்ள முடியாத நிலை இருக்கிறது என்றும், தற்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இருப்பதால் மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியும், சிறந்த பாட அறிவுடன், நல்ல டாக்டர்களாக உருவாவார்கள் என்றும் மொழிபெயர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள், பெரும்பாலான மருத்துவ சொற்கள் கிரேக்கம், லத்தீனில் இடம்பெற்று இருந்ததாகவும், அதை மொழிபெயர்ப்பது சவால் நிறைந்த பணியாக இருந்ததாகவும் தெரிவித்தனர். தமிழில் பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டு படிக்க முடியும் என்றாலும், ஏற்கனவே உள்ள விதிகளின்படி, தேர்வை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story