கோவில்பட்டயில்பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்த வாலிபர் சிக்கினார்


கோவில்பட்டயில்பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்த வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 12 Sep 2023 6:45 PM GMT (Updated: 12 Sep 2023 6:45 PM GMT)

கோவில்பட்டயில் பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி(கிழக்கு):

கோவில்பட்டியில் கோவிலில் சாமி கும்பிட்டு திரும்பி கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சங்கிலி பறிப்பு

கோவில்பட்டி அண்ணாமலை நகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி(வயது58). இவர் சில நாட்களுக்கு முன்பு தனது பேரனுடன் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் ெசய்து விட்டு பேரனுடன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அவர் கோவில் பின்புறமுள்ள காந்தி மைதானம் வழியாக பேரனுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் திடீரென்று அவரது கழுத்தில் கிடந்த 3பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓடினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன்...திருடன் என கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு ஓடிவந்துள்ளனர்.

அதற்குள் மர்ம நபர் தங்க சங்கிலியுடன் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

வாலிபர் கைது

இதில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஓடைப்பட்டி மாரியப்பன் மகன் சிங்கராஜ்(28) என்பவர், சுப்புலட்சுமியிடம் நகையை வழிப்பறி செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் சுப்புலட்சுமியிடம் நகையை பறித்ததை ஒப்புக் கொண்டார். மேலும், தனக்கு தாயார் இல்லை. தந்தை டி.பி.நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால், வழிப்பறியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அவரை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் கைது செய்தார்.


Next Story