தூத்துக்குடியில் கிரேன் ஆபரேட்டரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது


தூத்துக்குடியில் கிரேன் ஆபரேட்டரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2023 6:45 PM GMT (Updated: 11 July 2023 9:13 AM GMT)

தூத்துக்குடியில் கிரேன் ஆபரேட்டரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

கிரேன் ஆபரேட்டர்

தூத்துக்குடி தாளமுத்துநகர் சுடலையாபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி ஜேசுராஜ். இவருடைய மகன் டேவிட் (வயது 37). இவர் கிரேன் ஆபரேட்டராக உள்ளார். இவர் நேற்று மாலையில் அண்ணாநகர் 12-வது தெருவில் கிரேன் மூலம் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தாராம். அப்போது, 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு வந்து உள்ளது.

அரிவாள் வெட்டு

அவர்கள் திடீரென கிரேன் கண்ணாடியை அடித்து நொறுக்கி உள்ளனர். பின்னர் அதில் இருந்த ஆபரேட்டர் டேவிட்டை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந் தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த டேவிட் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

கைது

விசாரணையில் நேற்று முன்தினம் இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலம் நடந்த போது, அந்த பகுதியில் டேவிட் கிரேனை ஓட்டி சென்றாராம். அப்போது அங்கு வந்த சிலருக்கும், டேவிட்டுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் ஊர்வலம் முடிந்த பிறகு மோட்டார் சைக்கிளில் வந்து, டேவிட்டை அரிவாளால் வெட்டி இருப்பது தெரியவந்தது. மேலும், தூத்துக்குடி கணேஷ்நகரை சேர்ந்த ராஜபாண்டி (வயது 24), டி.எம்.பி.காலனியை சேர்ந்த சுடலைமுத்து மகன் சூர்யா (19), அரசடி பனையூரை சேர்ந்த சரவணக்குமார் மகன் கரண்குமார் (23) உள்ளிட்ட 6 பேர் சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் ராஜபாண்டி, சூர்யா, கரண்குமார் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.


Next Story