புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா - திமுக புறக்கணிப்பு


புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா - திமுக புறக்கணிப்பு
x

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை திமுக புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

தற்போதைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

கட்டுமான பணி முடிவடைந்து, புதிய நாடாளுமன்றம் தயாராகி விட்டது. வருகிற 28-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

ஆனால், மக்கள் பணத்தில் கட்டப்பட்டது என்பதாலும், நாட்டின் முதல் குடிமகள் என்பதாலும் ஜனாதிபதி திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின.

மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி போன்றவர்கள் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டனர். 28-ந் தேதி, சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதும் எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே, திறப்பு விழாவை கூட்டாக புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

முறைப்படியான அழைப்பிதழ் கிடைத்த பிறகு, இதுதொடர்பாக புதன்கிழமை (இன்று) இறுதி முடிவு எடுக்கப்படும். திறப்பு விழாவை கூட்டாக புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் சார்பில் கூட்டு அறிக்கை வெளியிடப்படும்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்நபர்களாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரைனும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜாவும், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை தங்கள் கட்சிகள் புறக்கணிப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை திமுகவும் புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக திமுக எம்பி திருச்சி சிவா அறிவித்துள்ளார். மே 28ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக திருச்சி சிவா எம்.பி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


Next Story