பீட்ரூட் கொள்முதல் விலை உயர்வு


பீட்ரூட் கொள்முதல் விலை உயர்வு
x
தினத்தந்தி 10 July 2023 8:45 PM GMT (Updated: 10 July 2023 8:45 PM GMT)

கோத்தகிரியில் பீட்ரூட் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் பீட்ரூட் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

காய்கறி சாகுபடி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பீட்ரூட், கேரட், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் புரூக்கோலி, சுகுனி, சல்லாரை போன்ற காய்கறிகளையும் பயிரிட்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து வருவதால் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் மலை காய்கறிகளின் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ பீட்ரூட் ரூ.50-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது கோத்தகிரி மண்டியில் ரூ.45 முதல் ரூ.50-க்கும், மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை தரத்திற்கு தக்கவாறு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பீட்ரூட் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

விலை உயர்வு

இதுகுறித்து கோத்தகிரி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறும்போது, தொழிலாளர்கள் பற்றாக்குறை, வனவிலங்குகள் தொல்லை, விதை மற்றும் இடுபொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு வங்கிகளில் இருந்து கடன் பெற்று காய்கறிகளை பயிரிட்டு வருகிறோம்.

தற்போது பருவநிலை மாற்றம் மற்றும் வரத்து குறைவின் காரணமாக மலை காய்கறிகளின் கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. மலை காய்கறிகளான பீட்ரூட், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளுக்கு போதுமான கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. இதனால் அதைப் பயிரிட்ட விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.


Next Story