உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 10 July 2023 6:27 AM GMT (Updated: 10 July 2023 6:37 AM GMT)

அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் தொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி கடந்த சில நாட்களாக ரூ.100-ஐ கடந்து விற்பனை ஆகிறது. தக்காளி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் விலை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. அதைத்தொடர்ந்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ரேசன் கடைகளில் தக்காளி விற்பனையை தொடங்கியது. அங்கு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில், தக்காளி, சின்ன வெங்காயம், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் தொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தலைமைச்செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உயர் அலுவலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் அத்தியாவசியப் பொருடகள் விலை உயர்வை தடுப்பது குறித்தும், நியாயவிலைக் கடைகள், உழவர் சந்தையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல்களை மேற்கொள்ளலாம்.

அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுவதை தடுக்க கடுமையாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு தேடிச் சென்று காய்கறிகளை விற்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் செயல்பட்டது போல, மாநகராட்சி மூலம் நடமாடும் காய்கறி கடைகளை தொடங்கலாம். காய்கறிகள் விலை உயர்ந்தாலும் அதன் பலன் விவசாயிகளுக்கு நேரடியாக ச்செல்லவில்லை. விவசாயிகளுக்கு நேரடியாக பலன் சென்று சேர வேளாண்மைத்துறை தனி கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story