இந்திய கலங்கரை விளக்க தினம்: மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த மாமல்லபுரம் கலங்கரை விளக்கம்


இந்திய கலங்கரை விளக்க தினம்: மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த மாமல்லபுரம் கலங்கரை விளக்கம்
x

இந்திய கலங்கரை விளக்க தினத்தை முன்னிட்டு நேற்று மாமல்லபுரம் கலங்கரை விளக்க மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மலைக்குன்றில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் 133 ஆண்டுகள் கடந்த புராதன சின்னமாக திகழ்கிறது. 1887-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மலைக்குன்றில் அமைக்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் ஆகும். மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கலங்கரை விளக்கங்கள் துறையின் கீழ் இந்த பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் செயல்பட்டு வருகிறது. கடலில் செல்லும் கப்பல்கள், மீனவர்களின் படகுகள், கடலோர காவல் படை ரோந்து கப்பல்களுக்கு சுழலும் விளக்கில் இருந்து செல்லும் வெளிச்சத்தின் மூலம் வழிகாட்டியாக இந்த கலங்கரை விளக்கம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்திய கலங்கரை விளக்க தினத்தை முன்னிட்டு நேற்று மாமல்லபுரம் கலங்கரை விளக்க மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. நேற்று இரவு நேரத்தில் கலங்கரை விளக்க சாலை மற்றும் ஐந்துரத சாலை வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் சீரியல் மின் விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்கும் கலங்கரை விளக்கத்தை புகைப்படம் எடுத்து ரசித்தனர்.

மேலும் இந்திய கலங்கரை விளக்க தினத்தை முன்னிட்டு நேற்று மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி மாமல்லபுரம் நகரின் அழகையும் புராதன சின்னங்களையும் கண்டு ரசிக்க இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்.


Next Story