இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை விமான நிலையத்தில் 5 திரைகள் கொண்ட திரையரங்கம் திறப்பு


இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை விமான நிலையத்தில்  5 திரைகள் கொண்ட திரையரங்கம் திறப்பு
x

இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்தில் பயணிகளின் பொழுது போக்கிறாக, 5 திரைகள் கொண்ட பிவிஆர் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை,

விமான நிலையங்களில், இணைப்பு விமானத்துக்காக பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படும் போதெல்லாம், இங்கு ஒரு தியேட்டரோ, ஷாப்பிங் மாலோ இருந்தால் நன்றாக இருக்குமே என பலரும் யோசித்திருப்பார்கள்.

அந்த யோசனை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் மல்டிலெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், திரையரங்கம், ஹோட்டல்கள், கடைகள் கொண்ட கட்டிட பணிகள் முடிவடைந்து விட்டன.

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட 5 திரைகள் கொண்ட பிவிஆர் திரையரங்கம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் தான் திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு முன்கூட்டியே வந்து அதிக நேரம் காத்திருக்கும் பயணிகள், சென்னை வந்து இணைப்பு விமானத்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக திரையரங்கம் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் அதிக நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கும், உறவினர் அல்லது நண்பர்களை வரவேற்கவோ, வழியனுப்பவோ காத்திருப்பவர்களுக்கும் இந்த திரையரங்குகள் நிச்சயம் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை விமான நிலையத்தில் தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஐந்து திரைகள் கொண்ட இந்த திரையரங்குகளில் சுமார் 1,150 பேர் ஒரே நேரத்தில் படம் பார்க்கலாம். சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிப்பவர்கள் புதிதாக கட்டப்பட்ட இணைப்பு பாலம் வழியாக திரையரங்கை அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள திரையரங்குகளை நடிகர் சதீஷ் ,ஆனந்த்ராஜ், கூல் சுரேஷ், இயக்குனர் வெங்கி, தயாரிப்பாளர் விஜய் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.


Next Story