இந்தியாவில் முதல் முறையாக முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை: 'விரைவில் திறக்கப்படும்' என அமைச்சர் தகவல்


இந்தியாவில் முதல் முறையாக முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை: விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் தகவல்
x

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை கிண்டியில் முதியோர்களுக்கு சிறப்பு மருத்துவமனை தயார்நிலையில் இருப்பதாகவும், விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், 11 சுயநிதி கல்லூரிகளும், ஆயுர்வேதா பிரிவில் ஒரு அரசு கல்லூரியும், 6 சுயநிதி கல்லூரிகளும், யுனானியில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியும், ஓமியோபதியில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியும், 11 சுயநிதி கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் மொத்தம் 2 ஆயிரத்து 64 இடங்கள் உள்ளன.

இந்த படிப்புகளில் சேர விருப்பம் தெரிவித்தவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 695 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 2 ஆயிரத்து 530 விண்ணப்பங்கள் தகுதியானவையாக கருதப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 556 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 968 விண்ணப்பங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடங்களுக்கு 913 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

இந்த மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.

கலந்தாய்வு

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மைதிலி கே.ராஜேந்திரன், தேர்வுக்குழு தலைவர் டாக்டர் மலர்விழி, இணை இயக்குனர் டாக்டர் பார்த்திபன், டாக்டர் மணவாளன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது. வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

வருகிற 31-ந்தேதி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும், அடுத்த மாதம் (நவம்பர்) 1 மற்றும் 2-ந்தேதிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது.

ஒப்புதல் அளிக்கவில்லை

தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தில் வேந்தராக முதல்-அமைச்சரும், இணை வேந்தராக அந்த துறையின் அமைச்சரும் இருப்பார்கள் என்றும், துணைவேந்தர் முதல்-அமைச்சரால் நியமிக்கப்படும் நபர் இருப்பார் என்றும் சட்டத்திட்டங்கள் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். மத்திய ஆயுஷ் மந்திரியிடமும் இதுதொடர்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிறுகுடல் பரிசோதனை செய்ய கருவி இந்தியாவில் முதல் முறையாக நிறுவப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை வழங்குவதால், அரசு மருத்துவ சேவையை மக்கள் கூடுதலாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே சென்னை மட்டும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது.

இந்தியாவில் முதல் முறையாக...

இந்தியாவிலேயே முதல் முறையாக முதியோருக்கான மருத்துவமனை இங்கு திறந்து வைக்கப்பட உள்ளது. டெல்லி எய்ம்ஸ் மற்றும் சென்னை கிண்டியில் முதியோருக்கான மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிகள் முடிவடையவில்லை. சென்னை கிண்டியில் முதியோர் மருத்துவமனை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்கு தயார்படுத்தியுள்ளோம்.

சென்னை கிண்டி, கிங் நோய்த் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை தொடங்க முதல்-அமைச்சரிடமும், மத்திய மந்திரியிடமும் நேரம் கேட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story