ரேஷன் கடைகளில் கலெக்டர் நேரில் ஆய்வு


ரேஷன் கடைகளில் கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 21 Dec 2022 6:45 PM GMT (Updated: 21 Dec 2022 6:45 PM GMT)

கிருஷ்ணகிரி தாலுகாவில் ரேஷன் கடைகளில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தாலுகாவில் ரேஷன் கடைகளில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி தாலுகாவில் 135 முழுநேர ரேஷன் கடை, 119 பகுதிநேர ரேஷன்கடை என மொத்தம் 254 ரேஷன்கடைகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 35,434 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கிருஷ்ணகிரி தாலுகாவில் கட்டிகானப்பள்ளி ஊராட்சி பாரதியார் நகர், அகசிப்பள்ளி ஊராட்சி கனகமுட்லு மற்றும் பெரியமுத்தூர் ஊராட்சி அவதானப்பட்டி ஆகிய ரேஷன் கடைகளில் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் அரிசி இருப்புகள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 35 கிலோ அரிசி வழங்கப்படும் பதிவேடுகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பருப்பு, சமையல் எண்ணெய், அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்எண்ணெய் குறித்து பதிவேடுகள் மற்றும் மின்னணு விற்பனை முனையத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விற்பனையாளர்களுக்கு அறிவுரை

அப்போது பொதுமக்களிடம் ரேஷன்கடைகளில் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா?, ரேஷன்கடை சரியான நேரத்திற்கு திறக்கப்படுகிறதா? என கலெக்டர் கேட்டறிந்தார். ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு பொருட்களை சரியான அளவில் வழங்க வேண்டும். அங்காடியை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், வட்ட வழங்கல் வருவாய் ஆய்வாளர் சத்தீஸ், வட்ட பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story