தட்கலில் எடுப்பது சிரமம்; பிரீமியம் தட்கலில் எளிதாய் கிடைக்கிறது:ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன?பயணிகள் குமுறல்


தட்கலில் எடுப்பது சிரமம்; பிரீமியம் தட்கலில் எளிதாய் கிடைக்கிறது:ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன?பயணிகள் குமுறல்
x
தினத்தந்தி 22 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 6:46 PM GMT)

ரெயில் டிக்கெட் முன்பதிவில் தட்கல், பிரீயம் தட்கல் முறை எப்படி உள்ளது என்பது குறித்து பயணிகள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.

தேனி

ரெயில் நிலையம் சென்று டிக்கெட்டுகளை நேரடியாக எடுப்பதற்கு பதிலாக, கம்ப்யூட்டர், செல்போன்களில் இணைய தளம் வழியாக முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.

திட்டமிட்டு பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விடுகிறார்கள். திடீரென்று பயணம் மேற்கொள்பவர்களுக்கு டிக்கெட் எடுக்க தட்கல் முறை கை கொடுக்கிறது.

தட்கல், பிரீமியம் தட்கல்

அதில் தட்கல் என்றும், பிரீமியம் தட்கல் என்றும் டிக்கெட் எடுக்க இரண்டு வழிகள் இருக்கின்றன. பிரீமியம் தட்கல் முறை கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் ஆனது.

வழக்கமான கட்டணத்தைக் காட்டிலும் தட்கல் கட்டணம், தூங்கும் வசதி கொண்ட சாதாரண பெட்டிகளுக்கு 10 சதவீதம் கூடுதலும், குளிர் சாதன வசதி கொண்ட உயர் வகுப்புகளுக்கு 30 சதவீதம் கூடுதலும் வசூலிக்கப்படுகிறது.

பிரீமியம் தட்கல் கட்டணம், புக்கிங் எண்ணிக்கையையும், குறைந்து வரும் சீட் எண்ணிக்கையையும் பொறுத்து மாறுபடும். எளிதாக சொல்லப்போனால், சீட்டுக்கான தேவை அதிகரிக்க, கட்டணமும் அதிகரிக்கும். சில நேரங்களில் சாதாரணக் கட்டணத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகக் கூட உயரலாம்.

தட்கல், பிரீமியம் தட்கல் இரண்டுமே பயண தேதிக்கு ஒரு நாளுக்கு முன்பு, பதிவு செய்ய வேண்டும். ஏ.சி வகுப்பில் பயணம் செய்ய காலை 10 மணிக்கும், மற்ற வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல்புக்கிங் தொடங்கும்.

விளக்கம் இல்லை

தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஐ.ஆர்.சி.டி.சி. தளத்தில் நுழைந்தால், 'தட்கல்', 'பிரீமியம் தட்கல்' என்ற இரண்டு விருப்பப் பகுதிகள் இருக்கும். உதாரணமாக 100 டிக்கெட்டுகள் அதில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். பலர் தட்கல் விருப்பப் பகுதியில் நுழைந்து அந்த டிக்கெட்டை எடுக்க முயற்சிப்பார்கள்.

சிலர் மறுநாளே பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். எனவே எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை என்று பிரீமியம் தட்கல் விருப்பப் பகுதியில் நுழைவார்கள். அவர்களுக்கு எளிதாக டிக்கெட்டு கிடைத்துவிடும். ஆனால் சாதரண தட்கல் விருப்பப் பகுதியில் நுழைந்தவர்களுக்கு எளிதில் கிடைப்பது இல்லை. ஏதாவது பிரச்சினை வரும். அல்லது பிரீமியம் முறையில் நுழைய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதற்குள் 100 டிக்கெட்டுகளும் காலியாகிவிட்டதாக திரையில் காட்டிவிடும். இதற்கு காரணம் என்ன என்பது யாருக்கும் தெளிவாகத் தெரிவது இல்லை. யாரும் விளக்குவதும் இல்லை.

சாதாரண தட்கல் முறை, பிரீமியம் தட்கல் முறை, இந்த இரண்டையும் இயக்க வெவ்வேறு கம்ப்யூட்டர் சர்வர்கள் இருக்குமாம். பிரீமியம் முறைக்கான சர்வர் அதிவேகத்தில் இயங்குவதும், சாதாரண தட்கல் முறைக்கான சர்வரோ மெதுவாக இயங்குவதுமே அதற்கு காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். பிரீமியம் முறையில் அதிக கட்டணத்தை வசூலிக்கவே இந்த ஏற்பாடு என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் ரெயில்வே அதிகாரிகள் அதை திட்டவட்டமாக மறுக்கிறார்கள். ரெயில் பயணிகளோ குமுறுகிறார்கள்.

இனி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்:-

3 மடங்கு கட்டணம்

கொடிவண்ணன் (தேனி):- தேனிக்கு 11 ஆண்டுகளுக்கு பிறகு முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் சேவை தான் தொடங்கி உள்ளது. சென்னை உள்பட வெளி நகரங்களுக்கு முன்பதிவு செய்து செல்வதாக இருந்தால் திண்டுக்கல் அல்லது மதுரைக்கு சென்று அங்கிருந்து தான் பயணம் செய்ய வேண்டியது உள்ளது. சென்னைக்கு செல்வதற்கு தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்ய மிகவும் சிரமமாக உள்ளது.

இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்யலாம் என்றால், விரைவில் தீர்ந்து விடுகிறது. தட்கல் கிடைக்காமல் போகும் அதே நேரத்தில் பிரீமியம் தட்கலில் டிக்கெட் கிடைத்தாலும், அதற்கு 3 மடங்கு கட்டணம் செலவிட வேண்டியது உள்ளது. தட்கல் முறையில் வழங்கும் டிக்கெட் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பிரீமியம் தட்கல் முறையில் நிலையான கட்டணம் இருக்க வேண்டும்.

முத்துலட்சுமி (முத்துத்தேவன்பட்டி) :- கிராமப்புற பகுதிகளில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு நகரங்களுக்கு செல்வதை தவிர்க்க இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யும் வசதி பயனுள்ளதாக இருக்கிறது. அதேநேரத்தில் ஒரே நேரத்தில் பலர் ரெயில்வே இணையதளத்தில் முன்பதிவு செய்ய முயற்சி செய்யும் போது, சிரமம் ஏற்படுகிறது.

நகரங்களில் அதிகவேகம் கொண்ட இணையதள சேவையால் எளிதில் டிக்கெட் பெற்றுவிடுகின்றனர். கிராமப்புற பகுதிகளில் இணையதள வேகம் குறைவு காரணமாக டிக்கெட் முன்பதிவு செய்ய தாமதம் ஆகிறது. அதற்குள் டிக்கெட் தீர்ந்து விடுகிறது. பிரீமியம் தட்கலில் டிக்கெட் பெறுவதற்கு அதிக செலவு ஆவதால், பஸ்களில் பயணம் செய்து விடலாம். அதுபோல், தேனியில் இருந்து சென்னைக்கு ரெயில் இயக்கினால் மக்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

அதிக டிக்கெட்

ரவிராம் (கம்பம்) :- ஆன்லைனில் சாதாரண அல்லது தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்து டிக்கெட் உறுதி செய்யாமல் காத்திருப்பில் இருக்கும். அவசர பயணமாக செல்ல வேண்டிய நிலை இருக்கும் போது, டிக்கெட் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ரெயில் நிலையம் செல்லும் மக்கள் கடைசி வரை டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவது அதிகரித்துள்ளது. முன்பதிவு உறுதி ஆகாத நிலையில், முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணம் செய்ய தனியாக டிக்கெட் எடுக்க வேண்டியது உள்ளது.

அதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுப்பதற்குள் ரெயில் புறப்பட்டு விடும். எனவே தட்கல் அல்லது சாதாரண முறையில் முன்பதிவு செய்தும் டிக்கெட் உறுதி ஆகாவிட்டால், அதே டிக்கெட்டை பயன்படுத்தி ரெயிலில் சாதாரண வகுப்பில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். முன்பதிவு இணையதள சர்வரை மேம்படுத்தவும், டிக்கெட் அதிக எண்ணிக்கையில் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை

தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி குகனேசன் கூறியதாவது:-

திடீர் என்று பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்காக தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இருக்கைகள் ஒதுக்கீடு வரையறுக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கைகள் நிரப்பப்படும். தட்கல் பிரீமியம் என்பது ஒரு வித்தியாசமான கோட்டா முறையாகும். இதில் மாறும் கட்டணம் (டைனமிக் கட்டணம்) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான ரெயில்களில் பிரீமியம் தட்கல் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு வகுப்பில் அதிகபட்சம் 30 சதவீதம் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முறை இருக்கும். தற்போது சர்வர் பிரச்சினை இல்லை. தட்கல் டிக்கெட்டுகள் பொதுமக்களுக்கு மிகவும் கிடைக்கின்றன.

நேரடியாகவும், இணைய முன்பதிவு மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். பயன்படுத்தப்படாத பிரீமியம் தட்கல் கோட்டாவுக்கு, அட்டவணைகள் தயாரிக்கும் போது தட்கல் காத்திருப்போர் பட்டியல் இருப்பவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும். சாதாரண தட்கல் கோட்டாவில் காத்திருப்பு பட்டியல் இல்லை என்றால், இந்த இருக்கைகள் பொது காத்திருப்பு பட்டியல் பயணிகளுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story