காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை


காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 16 Dec 2022 6:45 PM GMT (Updated: 16 Dec 2022 6:46 PM GMT)

தேய்பிறை அஷ்டமியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி

தேய்பிறை அஷ்டமியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.

தேய்பிறை அஷ்டமி

கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் காலபைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன. தொடர்ந்து பக்தர்கள் பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி வழிபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

சூரன்குட்டை

இதேபோல், கிருஷ்ணகிரியை அடுத்த சூரன்குட்டை தட்சிண காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து காலபைரவர் கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமியையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.


Next Story